உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராகி வரும் ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்!! இந்தியாவிற்கு வருகை எப்போது?
சர்வதேச அளவிலான அறிமுகத்திற்கு முன்னதாக 2021 ஸ்கோடா கோடியாக் காரின் சில ஸ்கெட்ச் படங்கள் புதியதாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த ஆண்டில் ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சேவை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ், இந்த ஆண்டின்(2020) இறுதியில் பிஎஸ்6 தரத்தில் கோடியாக் மாடல் விற்பனைக்கு வரலாம் என தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்போதுவரையில் ஸ்கோடா கோடியாக் நம் நாட்டு சந்தைக்கு வரவில்லை. செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடாவின் பிரதான எஸ்யூவி மாடல்களுள் ஒன்றாக விளங்கும் கோடியாக் வருகிற ஏப்ரல் 13ல் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதனை தொடர்ந்து இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 2021 கோடியாக்கின் புதிய ஸ்கெட்ச் படங்கள் அதன் சர்வதேச அளவிலான வெளியீட்டிற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களை வைத்து பார்க்கும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக கோடியாக்கின் தோற்றம் சிறிது திருத்தியமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

இந்த ஸ்கெட்ச் படங்கள் காரின் முன்பத்தில் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள எல்இடி ஹெட்லேம்ப்களை வெளிக்காட்டுகின்றன. இதற்கு கீழே பெட்டகம் வடிவிலான ஃபாக் விளக்கிற்கான குழி அப்படியே தொடரப்பட்டாலும், ஹெட்லேம்பின் வடிவம் சற்று மெல்லியதாக மாற்றப்பட்டுள்ளது.

பொனெட் பகுதி கூர்மையான முன்பக்கத்திற்கு ஏற்ப இரட்டை மல்டி-ஸ்லாட் முன்பக்க க்ரில் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சற்று தடிமனான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள முன்பக்க பம்பரில் அகலமான மைய காற்று ஏற்பானிற்கு இரு பக்கங்களிலும் புதிய L-வடிவிலான பாகங்கள் இந்த படங்களில் காட்சி தருகின்றன.

இதில் ஒரு ஸ்கெட்ச் படம் பின்பக்க டெயில்லைட்டின் தோற்றத்தை மிக நெருக்கமாக காட்டுகிறது. முன்பக்க ஹெட்லைட்டை போன்று பின்பக்க டெயில்லைட்டும் முந்தைய கோடியாக்கில் வழங்கப்பட்டு இருந்ததை காட்டிலும் சற்று மெல்லியாதாக காட்சியளிக்கிறது.

இத்தகைய தோற்ற மாற்றங்களுடன் ஸ்கோடா பிராண்டில் இருந்து சமீபத்தில் அறிமுகமான கார்களில் வழங்கப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் பெரும்பாலானவற்றை புதிய கோடியாக்கிலும் எதிர்பார்க்கலாம்.

இருப்பினும் வழக்கமான 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் தான் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் தொடரப்பட உள்ளது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்-ஸ்பேஸ் காரிலும் இதே பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்படுகிறது.

புதிய கோடியாக்கின் இந்திய அறிமுக தேதி இதுவரையில் அதிகாரப்பூர்வ வெளியிடப்படவில்லை. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் டிகுவான் (5-இருக்கை) காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய வருகை இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








