மஹிந்திரா ஸ்கார்பியோ காரை குளத்தில் கொண்டு போய் சொருகிய சிறுவன்... என்னப்பா இப்புடி பண்ணிட்டியே...
திரளாக கிராம மக்கள் கூடியிருக்க, ஸ்கார்பியோ கார் ஒன்று ஸ்டண்டில் ஈடுபடுவதுபோன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஷாக் சம்பவம் குறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடியிருந்த இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று சாகச செயலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இந்த சம்பவம் நாட்டின் எந்த பகுதியில் அரங்கேறியது என்பது பற்றிய துள்ளியமான விபரம் கிடைக்கவில்லை.

இருப்பினும், காரை ஓர் சிறுவன் இயக்கியதாகக் கூறப்படுகின்றது. வீடியோவும் அதைதான் உறுதிப்படுத்துகின்றன. சிறுவனால் காரை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் அக்கார் ஓர் குளத்தில் சென்று சொருகியது. இதுகுறித்த அதிர்ச்சியான வீடியோவே தற்போது இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது.

தகுதியற்ற இடத்தில் ஸ்டண்ட் செய்தது மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த சூழ்நிலையில் சிக்கர காரணமாக அமைந்துள்ளது. பொது இடங்களில் வாகன ஸ்டண்டில் ஈடுபடுவது விதிமீறல் செயலாகும். இது தண்டனைக்குரியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று, உரிய உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனத்தை இயக்குவதும் தண்டனைக்குரிய செயலாகும்.

இவையிரண்டுமே இந்த சம்பவத்தில் அரங்கேறியிருக்கின்றன. வீடியோவில் இடம் பெற்றிருக்கும் நபர் முதிர்ந்த வயதுடையவராக தெரியவில்லை. அவர் பதின் பருவத்தைக்கூட தொடாத ஓர் சிறியவராகவே காட்சியளிக்கின்றார். இவரே காலியான இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் ஸ்டண்ட் செய்து பெரும் ஆபத்தான சூழ்நிலையைச் சந்தித்திருக்கின்றார்.

ஆரம்பத்தில் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைபோல் காட்சியளிக்கின்றது. ஆனால், இந்த நிலை சில நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை, ஒரு சில நொடிகளிலேயே நிலைமை அப்படியே தலைகீழாக மாறி, மிக ஆபத்தான சூழ்நிலைக்கு காரை இழுத்துச் சென்றிருக்கின்றது.

ஆபத்தை உணராமல் காரை இயக்கியது மட்டுமே இந்த நிலைக்கு முக்கிய காரணம் ஆகும். மேலும், தகுதியற்ற இடத்தில், வாகனத்தை இயக்க தகுதியற்ற சிறுவன் ஓட்டியதும் ஓர் மிக முக்கியமான காரணமாகும். குளத்தில் இருந்து ஸ்கார்பியோ மீட்கப்பட்டுவிட்டதா என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.
அதேசமயம், இன்னொரு வாகனத்தின் உதவியின்றி மீட்க முடியாது என்ற நிலையில் ஸ்கார்பியோ இருப்பதை வீடியோ காட்டுகின்றது. இதுபோன்ற விபரீத சம்பவங்கள் அரங்கேறும் என்ற காரணத்திற்காகதான் போக்குவரத்து விதிகள் சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதிப்பதில்லை.

இருப்பினும், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த சம்பவம் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இந்த விதிமீறலில் ஈடுபடும் சிறுவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களுக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என புதிய போக்குவரத்து விதிகள் கூறுகின்றன.

மேலும், 2019 செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட புதிய விதிகள், சிறுவர்கள் வாகன ஸ்டண்டில் சிக்குவார்களானால், 25 வயதுக்கு பின்னரே அவர்களால் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என கூறுகின்றது. இதுதவிர, உச்சபட்சமாக 25 ஆயிரம் அபராதம், வாகனத்தை ஓட்ட அனுமதித்த பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமா?
வாகனங்களை சாகச செயல்களில் ஈடுபடுத்துவதனால் குறிப்பிட்ட அந்த வாகனம் லேசான சேதங்களை சந்திக்க தொடங்கும். இதனை தொடர்ச்சியாக செய்யும்போது வாகனம் கடுமையாக சேதத்தை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், வாகன ஸ்டண்டில் ஈடுபடுவது அனைத்து தரப்பிலும் உங்களுக்கு தலைவலியையே ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








