மஹிந்திரா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட முதல் சாங்யாங் மின்சார கார் வெளியீடு!
மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார வாகன கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சாங்யாங் கொரண்டூ இ-மோஷன் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் படம் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலக அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த புதிய மின்சார எஸ்யூவி குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாங்யாங் நிறுவனத்தின் முழுமையான முதல் மின்சார கார் மாடலாக கொரண்டு இ-மோஷன் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி மின்சார வாகனங்களுக்காக மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய MESMA என்ற கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதே கட்டமைப்புக் கொள்கையில்தான் மஹிந்திரா நிறுவனத்தின் இ-எக்ஸ்யூவி300 மின்சார எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே, சாங்யாங் கொரண்டு இ-மோஷன் மற்றும் மஹிந்திரா இ-எக்ஸ்யூவி300 எஸ்யூவிகளுக்கு இடையே தோற்றத்தில் சில ஒற்றுமைகளை பார்க்க முடிகிறது.
சாங்யாங் கொரண்டூ இ-மோஷன் மின்சார எஸ்யூவியில் 61.5kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்ஜி கெம் நிறுவனத்திடம் இருந்து இந்த பேட்டரி சப்ளை பெறப்படுகிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 420 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 250 கிமீ முதல் 300 கிமீ வரையிலான ரேஞ்ச் திறனை எதிர்பார்க்கலாம்.
இந்த எஸ்யூவியில் 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மின் மோட்டார் இடம்பெற்றிருக்கும். மணிக்கு 152 கிமீ வேகம் வரை செல்வதற்கான வாய்ப்பை வழங்கும்.
இந்த எஸ்யூவியின் உற்பத்தி கடந்த 14ந் தேதி துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் ஆகிய மின்சார எஸ்யூவிகளுக்கு இது போட்டியாக இருக்கும்.
இதே கட்டமைப்புக் கொள்கையில்தான் சாங்யாங் நிறுவனத்தின் டிவோலி எஸ்யூவியின் மின்சார மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மாடல் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை மஹிந்திரா நிறுவனத்தின் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பில் இந்த மின்சார மாடல்களை சாங்யாங் நிறுவனம் உருவாக்கி வந்துள்ளது.
ஆனால், சாங்யாங் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேற மஹிந்திரா முடிவு செய்துள்ளதால், அந்நிறுவனம் திட்டமிட்டபடி தனது புதிய கார்களை சந்தைக்கு கொண்டு வருமா என்பதில் தொடர்ந்து ஐயப்பாடு இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








