ஸ்டீல் சப்ளை பிரச்னை... முன்னணி நிறுவனங்களின் கார் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
மஹாராஷ்டிராவில் உள்ள போஸ்கோ ஸ்டீல் தொழிற்சாலையில் நிலவும் தொழிலாளர் பிரச்னை காரணமாக, பிரபல நிறுவனங்களின் கார் உற்பத்தி ஸ்தம்பித்துப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த போஸ்கோ நிறுவனம் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ராய்கட் பகுதியில் ஸ்டீல் தொழிற்சாலையை நடத்தி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்துதான் மாருதி, ஹூண்டாய், கியா, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் கார் தயாரிப்புக்கு தேவையான ஸ்டீல் சப்ளை பெறப்படுகிறது.

இந்த நிலையில், ராய்கட் போஸ்கோ ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு ஸ்டீல் உற்பத்திப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்டீல் சப்ளையில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

பல முன்னணி நிறுவனங்களிடம் கார் தயாரிப்புக்கான ஸ்டீல் இருப்பு குறைந்துவிட்டதால், அடுத்து வரும் நாட்களில் கார் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது.

கடந்த மார்ச் 4ந் தேதி முதல் போஸ்கோ ஆலையில் இருந்து கார் நிறுவனங்களுக்கு ஸ்டீல் சப்ளை செய்யப்படவில்லை. ஆலை வளாகத்தில் ஸ்டீல் ஏற்றப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்த டிரக்குகள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு சப்ளை முற்றிலுமாக இல்லை.

இந்த நிலைமை சீரடையவில்லை என்றால், மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார், கியா மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் கார் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலைமை குறித்து இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு( சியாம்) கவலை தெரிவித்துள்ளது. சியாம் அமைப்பின் இயக்குனர் ராஜேஷ் மேனன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"போஸ்கோ ஆலை பிரச்னை காரணமாக, கார் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

அடுத்து வரும் நாட்களில் நிலைமை சீரடையவில்லை என்றால், சில கார் நிறுவனங்களின் உற்பத்தி முற்றிலுமாக முடங்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சிஸ நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால், கார் நிறுவனங்கள் சில உற்பத்திப் பிரிவுகளில் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை உருவாகும். ," என்று கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்னை காரணமாக, ஏற்கனவே செமி கன்டக்டர் சப்ளை பிரச்னையால் உலக அளவில் கார் உற்பத்தியில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் செமி கன்டக்டர் கருவி சப்ளை பிரச்னையால் ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்களின் கார் உற்பத்தியில் சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில், ஸ்டீல் சப்ளை பிரச்னை, வாகன நிறுவனங்களுக்கு அடுத்த தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கார் உற்பத்தி முடங்கினால், புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுப்பதிலும் சிக்கல்கள் எழும்.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, போஸ்கோ ஆலையில் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் உடன்பாடு ஏற்பட்டிருப்பதால், போராட்டம் விரைவில் வாபஸ் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விரைவில் அங்கு ஸ்டீல் உற்பத்திப் பணிகள் துவங்க இருப்பதால், கார் நிறுவனங்களுக்கும், புதிய கார் வாங்க இருப்போருக்கும் இது நல்ல செய்தியாகவே அமையும்.


Click it and Unblock the Notifications








