அறுவடை செய்ய டிராக்டர் இல்லையா? தமிழக விவசாயிகளே கவலை விடுங்க... இலவசமாக வாடகைக்கு தரும் பிரபல நிறுவனம்...
தமிழகத்தின் சிறிய விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரபல டிராக்டர் உற்பத்தி நிறுவனம் இலவச டிராக்டர் வாடகை சேவையை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பிரபல டிராக்டர் மற்றும் விவசாயம் சார்ந்த கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் டிஏஎஃப்இ (Tractors and Farm Equipment Limited -TAFE). இந்நிறுவனம், தமிழக விவசாயிகளின் இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து இலவச டிராக்டர் வாடகை சேவை திட்டத்தை மாநிலத்தில் தொடங்கியுள்ளது.

ஆமாங்க, பிரத்யேகமாக தமிழக விவசாயிகளுக்காக மட்டுமே இத்திட்டத்தை நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் மிகவும் இக்கட்டான சூழ்நிலை நிலவி வருகின்றது. பெரும்பாலான மாநிலங்கள் கோவிட்-19 வரைஸ் இரண்டாம் அலை பரவலின் தீவிரத்தில் சிக்கி பெருத்த இன்னல்களைச் சந்தித்து வருகின்றது.

அந்தவகையில், அதிக அவதிக்குள்ளாகி வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தற்போது மாநிலத்தில் நிலவி வருவதால் ஒட்டுமொத்த தமிழர்களும் ஏதோ ஓர் வகையில் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, விவசாயிகளின் நிலை படுமோசமானதாக காணப்படுகின்றது. முழு ஊரடங்கின் காரணமாக தங்களின் விளை பொருட்களை விற்பனைச் செய்வதில் அவர்கள் பெரும் சிக்கல்களையும், சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும் அவர்கள் தவித்து வருகின்றனர். இத்தகையோருக்கு உதவும் வகையிலேயே டேஃப் நிறுவனம், டிராக்டர் இல்லாத சிறிய விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வாடகைக்கு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

சிறு விவசாயிகளுக்கான இத்திட்டம் 2021 மே தொடங்கி 2021 ஜூலை மாதம் இறுதி வரை செயல்பாட்டில் இருக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் வாயிலாக சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இத்திட்டத்திற்காக மேஸ்ஸி ஃபெர்குஸன் மற்றும் ஈசர் டிராக்டர் உள்ளிட்ட விவசாய வாகனங்களை நிறுவனம் தயார்நிலையில் வைத்துள்ளது. இந்த வாகனங்களையே ஒரு ரூபாய் கூட கட்டணமும் இன்றி தமிழக விவசாயிகளுக்கு வழங்க டேஃப் திட்டமிட்டிருக்கின்றது.

உழவன் எனும் செயலி வாயிலாக விவசாயிகள் தங்களுக்கான டிராக்டர்களை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முயற்சி மாநில வேளாண்மைத் துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

Source: AutoEconomicTimes
தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் டேஃப், மிக சமீபத்தில் தமிழக அரசுக்கு உதவும் விதமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியது. கிராமம் மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் இவற்றை நிறுவனம் வழங்கியது.


Click it and Unblock the Notifications








