பாதுகாப்பில் யாரும் கிட்ட கூட வர முடியாது... விஸ்வரூபம் எடுக்கும் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனை... கொல மாஸ்
இந்தியாவில் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை விஸ்வரூபமெடுத்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2020ம் ஆண்டின் மத்தியில் இருந்து இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த வேகம் தற்போதைக்கு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை போல் தெரிகிறது. கடந்த ஜனவரி மாதமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரான அல்ட்ராஸ், கடந்த ஜனவரி மாதம் 7,378 என்ற மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதுதான் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையாகும். இதற்கு முன்பு ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் டாடா அல்ட்ராஸ் விற்பனையானது இல்லை.

அத்துடன் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021ம் ஆண்டு ஜனவரியில் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் விற்பனையில் 63.77 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை வெறும் 4,505 ஆக மட்டுமே இருந்தது.

இதேபோல் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டாலும் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6,600 அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது 11.79 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் விற்பனை உயர்ந்து கொண்டே வருவது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கார்களின் பாதுகாப்பு குறித்து ஏற்பட்டு வரும் விழிப்புணர்வே டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற 3 மேட் இன் இந்தியா கார்களில் ஒன்றாக டாடா அல்ட்ராஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா அல்ட்ராஸ் தவிர, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் விற்பனை வரும் மாதங்களிலும் சிறப்பாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் டாடா நிறுவனம் சமீபத்தில்தான் அல்ட்ராஸ் காரின் ஐ-டர்போ மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அல்ட்ராஸ் காரின் விற்பனை இன்னும் உயர்வதற்கு இந்த புதிய ஐ-டர்போ மாடல் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது. தற்போதைய நிலையில் இந்த செக்மெண்ட்டிலேயே மிகவும் பாதுகாப்பான கார் அல்ட்ராஸ்தான் என்பது, அதன் மிகப்பெரிய பலம்.


Click it and Unblock the Notifications








