உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு... கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியது டாடா!
உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதையடுத்து, தனது கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். விலை உயர்வுக்கான காரணம், அதிபட்சமாக எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஓர் ஆண்டு காலமாக கொரோனா பிரச்னை காரணமாக, கார் விலையை உயர்த்தும் வாய்ப்பு இல்லாத நிலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இருந்து கார் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதால், புத்தாண்டில் கார் விலையை உயர்த்துவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்தன.

அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலையை ரூ.24,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜனவரி 22 (நேற்று) முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் தயாரிப்புக்கு தேவைப்படும் குறிப்பிட்ட சில முக்கிய மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால், விலை அதிகரித்துள்ளது. இதனால், கார்களின் உற்பத்தி செலவீனம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும், கார் தயாரிப்புக்கான ஸ்டீல் விலை அதிகரிப்பு, செமி கன்டக்டர் எனப்படும் முக்கிய மின்னணு உதிரிபாகத்திற்கான தட்டுப்பாடு போன்றவற்றாலும், விலை உயர்வை கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, கடந்த 21ந் தேதி வரை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு பழைய விலையிலேயே கார் டெலிவிரி கொடுக்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு இந்த விலை உயர்வு மூலமாக எந்த பாதிப்பும் இல்லை என்பது ஆறுதல் தரும் விஷயமாக இருக்கும்.

மாருதி, மஹிந்திரா நிறுவனங்களை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது புத்தாண்டில் கார் வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

இந்த சூழலில், தனது விற்பனை வளர்ச்சியை தக்க வைக்கும் விதத்தில் புதிய மாடல்களை களமிறக்கும் முனைப்பில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. அதன்படி, அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் மற்றும் புதிய சஃபாரி 7 சீட்டர் எஸ்யூவி மாடல்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








