புதிய டாடா பஞ்ச் காரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் துவங்கின
முதற்கட்டமாக முன்பதிவு செய்தவர்களுக்கு டாடா பஞ்ச் கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் இந்தியா முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியாகியுள்ள படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய மைக்ரோ-எஸ்யூவி காராக பஞ்ச்-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ப்யூர், அட்வென்ச்சர், அக்கம்ப்ளிஷ்டு மற்றும் க்ரீயேட்டிவ் என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய டாடா எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.49 லட்சத்தில் இருந்து ரூ.9.39 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தான் தற்போது டாடா பஞ்ச் கார்களின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளதாக ரஷ்லேன் செய்திதளம் சில படங்களை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் காரினை டெலிவிரி செய்யும் அளவிற்கு போதுமான பஞ்ச் கார்கள் இருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதுவரையில் முன்பதிவு செய்யப்பட்ட பஞ்ச் கார்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அதேநேரம், அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் டாடா பஞ்ச் மாடல் தொடர்ந்து சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. எதிர்காலத்தில் சிஎன்ஜி & எலக்ட்ரிக் தேர்வுகளிலும் பஞ்ச் மாடலை கொண்டுவர டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட சோதனை ஓட்டமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

டிசைன் மற்றும் வசதிகளை புதிய டாடா பஞ்ச், ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா ஹெரியர் & நெக்ஸான் மாடல்களில் இருந்து பெற்று வந்துள்ளது. ஆல்ஃபா-ஆர்க் ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் டாடா மோட்டார்ஸின் இந்திய எஸ்யூவி வரிசையில் கடைசி இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அளவில் சிறியதாக இருப்பினும் டாடா கார்களே உண்டான கம்பீரமான தோற்றத்தை பெற்றுவந்துள்ள பஞ்ச் காரில் உட்புறத்தில் போதுமான அளவிற்கு இடவசதியும், தொழிற்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பஞ்ச் மாடல் 187மிமீ க்ரவுண்ட் க்ளியரென்ஸ் (தரையில் இருந்து காரின் அடித்தளம் உள்ள உயரம்) உடன் மிகவும் நிமிர்ந்த தோற்றத்தை கொண்டுள்ளது.

இத்தகைய அதிகமான க்ரவுண்ட் க்ளியரென்ஸினால் சவாலான பயணங்களுக்கும் பஞ்ச் காரை பயமின்றி கொண்டு செல்லலாம். மொத்தம் 7 விதமான நிறத்தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா பஞ்ச் எஸ்யூவி காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த காருக்கு வழங்கப்பட்டிருக்கும் ரிதம் மற்றும் டஸல் என்ற இரு கூடுதல் ஆக்ஸஸரீ தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றினையும் தேர்வு செய்யலாம்.

பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், சிக்னெச்சர் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் கதவுகள், சக்கர வளைவுகள் & சில்-களில் தனித்துவமான க்ளாடிங்குகள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் பஞ்ச் காரை மேற்கூரை தண்டவாள கம்பிகள் மற்றும் இரட்டை-நிற மேற்கூரை உடனும் வாங்கலாம்.

இந்த மைக்ரோ-எஸ்யூவி காரில் ஆர்16 டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. டாடா பஞ்ச்சின் உட்புறம் 3-அம்பு டிசைனில், பிரீமியம் தரத்திலான துணிகளால் மூடப்பட்ட இருக்கைகள், லெதரால் அலங்கரிக்கப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் & கியர் க்னாப் மாற்றிகள், காரின் உடல் நிறத்தில் ஏசி துளைகள் மற்றும் கிளாசியர் க்ரே உள்ளீடுகளுடன் க்ரானைட் கருப்பு நிறத்தில் டேஸ்போர்டை கொண்டுள்ளது.

இவற்றுடன் 7-இன்ச் ஹர்மன் தொடுத்திரை, 7-இன்ச் டிஎஃப்டி செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் iRA இணைப்பு தொழிற்நுட்பம் போன்றவையும் டாடா பஞ்ச்சின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்பக்க இரட்டை காற்றுப்பைகள், ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக பார்க்கிங் கேமிரா, இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் கார்னரிங் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

இயக்க ஆற்றலை வழங்க டாடா பஞ்ச்சில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பிஎஸ்6 என்ஜின் அதிநவீன டைனா-ப்ரோ தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 86 எச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








