ஆட்டம் ஆரம்பிச்சாச்சு... Tata Punch காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடக்கம்... Maruti Ignis இனிமே ஓரம்தான்!
இந்தியாவில் Tata Punch காருக்கான புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் சமூக வலை தளம் வாயிலாக நெட்டிசன் ஒருவர் டாடா பஞ்ச் கார் எப்போது அறிமுகமாகும் எழுப்பிய கேள்விக்கு, டாடா நிறுவனம் விரைவில் பண்டிகையை முன்னிட்டு அறிமுகமாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வரும் கார் மாடல்களில் ஒன்றாக டாடா பஞ்ச் (Tata Punch) இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். மஹிந்திராவின் கேயூவி என்எக்ஸ்டி மற்றும் மாருதி சுசுகியின் இக்னிஸ் கார் மாடல்களுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதைத் தொடர்ந்து இக்காருக்கான புக்கிங்கை நிறுவனத்தின் டீலர்கள் தற்போது இந்தியாவில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ புக்கிங் தொடக்கம் கிடையாது. ஆம், நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே புக்கிங் பணிகளை தொடங்கியிருக்கின்றனர் டாடா கார் விற்பனையாளர்கள்.

இது ரீஃபண்டபிள் தொகை ஆகும். ஆகையால், கார் பிடிக்கவில்லை என்றாலோ அல்லது வேறு காரணத்திற்காக புக்கிங் ரத்து செய்தாலோ தொகை அப்படியே எந்த பிடித்தமும் இன்றி வழங்கப்படும் என தெரிகின்றது. டாடா பஞ்ச் ஓர் ஐந்து இருக்கைகள் வசதிக் கொண்ட காரும்கூட. இந்த எக்கசக்க சிறப்பு வசதிகளை வழங்க டாடா திட்டமிட்டிருக்கின்றது.

அந்தவகையில், பன்முக ரைடிங் மோட்கள் (ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்), அதிக பாதுகாப்பு வசதிகள் மற்றும் கவர்ச்சியான உடல் தோற்றம் என பல வசதிகள் டாடா பஞ்சில் எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் தனது இம்பேக்ட் டிசைன் 2.0 தாத்பரியத்தைப் பயன்படுத்தியே பஞ்ச் காரை உருவாக்கியிருக்கின்றது. இத்துடன், ஆல்ஃபா ஆர்க் கட்டுமானத்தையும் அது பயன்படுத்தியிருக்கின்றது.

இந்த யுக்திகளைக் கையாண்டு தயாரிக்கப்பட்ட அல்ட்ராஸ் அதிக பாதுகாப்பான கார் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கின்றது. ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது. ஆகையால், பஞ்ச் காரும் அதிக பாதுகாப்பு ரேட்டிங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இந்தியாவின் மலிவு விலை கார்களில் ஒன்றாக இது எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், டாடா பஞ்ச் ரூ. 5 லட்சம் தொடங்கி ரூ. 8.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் பஞ்ச் காரை எச்2எக்ஸ், எச்பிஎக்ஸ் மற்றும் ஹார்ன்பில் ஆகிய பெயர்களில் குறிப்பிட்டு வந்தநிலையில் தற்போது இக்காரை பஞ்ச் எனும் பெயரில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

இளைஞர்கள் மற்றும் பட்ஜெட் வாகன விரும்பிகளை இந்த கார் பெரியளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்ஜினை பயன்படுத்த இருக்கின்றது. இத்துடன் டர்போசார்ஜட் எஞ்ஜினும் இதில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தகைய ஓர் காருக்கு இந்தியாவில் தற்போது டாடா கார் விற்பனையாளர்கள் புக்கிங் பணியைத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், எவ்வளவு முன் தொகையில் புக்கிங் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை. டீலர்கள் ஒவ்வொருவரும் தங்களின் வசதிக்கேற்ப முன் தொகையைப் பெற்று புக்கிங் பணியை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.

டாடா பஞ்ச் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தியபோது இருந்த அதே தோற்றத்தில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. வித்தியாசமான பம்பர்கள் மற்றும் கதவு கிளாடிங்குகள், டயர்கள், இரட்டை நிறம் ஆகியவற்றுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதே ஸ்டைலையே லேசான மாற்றங்களுடன் விற்பனைக்கான பஞ்ச் மாடலில் டாடா பயன்படுத்தியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஞ்ச்குறித்து வெளியாகி வரும் படங்கள் அமைந்துள்ளன.

ஸ்போர்ட்டி லுக்கை வழங்கும் வகையில் இரு நிறங்கள், அழகான ஜன்னல்கள், கவர்ச்சிகரமான வீல் உள்ளிட்டவையே பஞ்ச் இல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் இக்காரை வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகையால், இதன் அறிமுகம் பற்றிய தகவல் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








