தமிழகம் உட்பட 3 மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் டாடா... உலகளவில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண அதிரடி!
உலகளவில் நிலவி வரும் செமிகன்டக்டர் பற்றாக் குறை பிரச்னையைப் போக்க இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா குழுமம் (tata group) ஓர் அதிரடி முடிவை எடுத்திருக்கின்றது. அது என்ன என்பது பற்றிய முக்கிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகளவில் செமிகன்டக்டர் பற்றாக்குறை தலைவிரித்தாடி வருகின்றது. இதனால் வாகன உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையால் புதிய வாகனத்தை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு உரிய வாகனத்தை டெலிவரிக் கொடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.

மேலும், சொன்னதைவிட காத்திருப்பு காலம் கூடியிருப்பதனால் வாடிக்கையாளர்கள் சிலர் ஏற்கனவே செய்த புக்கிங்கை கேன்சல் செய்ய தொடங்கியிருக்கின்றனர். இதனால் சில நிறுவனங்கள் நேரடியாகவே பாதிக்கத் தொடங்கியுள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலைக்கு முற்று புள்ளி வைக்கும் முயற்சியிலேயே இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் களமிறங்கியிருக்கின்றது.

வாகன உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் கருவிகளில் செமிகன்டக்டர்களும் ஒன்று. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட சிக்கல்களினால் இவற்றின் உற்பத்தியும் மிகக் கடுமையாகக் குறைந்து காணப்படுகின்றது. இதன் விளைவாகவே உலகளவில் இதன் பற்றாக்குறை தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கின்றது.

இந்த நிலையிலேயே செமிகன்டக்டர் அசெம்பிள் மற்றும் பரிசோதனை கூடத்தை அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இந்த கூடத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. மூன்று மாநிலங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

தமிழகம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுடனேயே நிறுவனம் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், இவற்றில் ஏதேனும் ஓர் மாநிலத்திலேயே நிறுவனத்தின் செமிகன்டக்டர் அசெம்பிள் மற்றும் பரிசோதனை கூடம் அமைய இருக்கின்றது. நிலத்தைப் பெறுவதற்கான இந்த பேச்சுவார்த்தை முடியும் பட்சத்தில் செமிகன்டக்டர் அசெம்பிள் மற்றும் டெஸ்ட் ஆலையை அமைக்கும் பணியை நிறுவனம் மேற்கொள்ளும்.

நிறுவனம் செமிகன்டக்டர் உற்பத்தியில் நுழைய இருப்பதாக கடந்த காலங்களிலும் அறிவித்திருக்கின்றது. ஆனால், இப்போதே முதல் முறையாக நிறுவனம் நடைமுறையில் இதற்கான வேலையில் களமிறங்கியிருக்கின்றது. டாடா குழுமம் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனும் மிகப் பெரிய சஃப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே நிறுவனம் இந்தியாவில் மையமாகக் கொண்டு செமிகன்டக்டர் உற்பத்தி பணிகளைத் தொடங்க திட்டமிட்டிருக்கின்றது. இதன் வாயிலாக இந்தியாவில் தற்போது நிலவும் செமிகன்டக்டர் பற்றாக்குறை எதிர்காலத்தில் குறைந்துக் காணப்படும் என நம்பப்படுகின்றது.

மேலும், தற்போது செமிகன்டக்டர் பற்றாக்குறையால் ஏற்பட்டிருப்பதைப் போன்ற சிக்கல் எதிர்காலத்தில் ஏற்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. செமி கன்டக்டர் பற்றாக்குறையால் இந்தியாவில் மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள்கூட பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








