தமிழக முதல்வரை நேரில் சந்தித்த Tata Group தலைவர்... Ford தொழிலாளர்களுக்கு விரைவில் நல்ல பதில் காத்திருக்கு!
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை டாடா குழுமத்தின் (Tata Group) தலைவர் சந்திரசேகரன் நேரில் சந்தித்து ஆலோசித்திருக்கின்றார். ஃபோர்டு () நிறுவனத்திற்கு சொந்தமான சென்னையை ஆலையைக் கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையே இந்த சந்திப்பின்போது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஃபோர்டு (Ford). இந்நிறுவனம், இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அண்மையில் தகவல் வெளியிட்டது. வெளியேற்றத்தைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களான ஈகோஸ்போர்ட், ஃபிகோ, அஸ்பயர் மற்றும் எண்டீயோவர் ஆகியவற்றின் வர்த்தகத்தையும் நாட்டில் நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்தது.

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அது பேரிடியாக அமைந்தது. தற்போது அவர்களின் நிலை கேள்விக் குறியாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலையை இந்திய வாகன உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் டாடா மோட்டார்ஸ் (Tata Motor) நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபோர்டு நிறுவனம் 2.5 பில்லியன் முதலீட்டில் சென்னை மற்றும் சனாந்த் (குஜராத்) ஆகிய இரு பகுதிகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருக்கின்றது. இதில், சென்னை தொழிற்சாலையை வாங்கும் பணிகளிலேயே டாடா மோட்டார்ஸ் தற்போது களமிறங்கியிருக்கின்றது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை, டாடா குழுமத்தின் தலைவர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார்.

ஃபோர்டு ஆலை கையகப்படுத்துதல் பற்றிய முக்கிய ஆலோசனைகள் இந்த சந்திப்பின்போது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வின்போது கிராமப்புறத் தொழில்துறை அமைச்சர் டிஎம் அன்பரசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

மேலும், பேச்சுவார்த்தை என்ன நிலையில் இருக்கின்றது என்பது பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆகையால், முக்கிய விபரங்கள் இன்னும் வெளியாகாத நிலையே தென்படுகின்றது.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வாகன உற்பத்தியை என அனைத்தையுமே நிறுத்தியிருக்கின்றது. அதேவேலையில் தனது சென்னை ஆலையை வெளிநாடுகளுக்கான வாகன எஞ்ஜின்களை ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.

தனது இந்தியா வெளியேற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு இந்த தகவலையும் நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. தொடர் விற்பனை சரிவு, வர்த்தகம் பாதிப்பு உள்ளிட்டவையே ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

ஆரம்பத்தில் லட்சக் கணக்கில் வாகனங்களை உற்பத்தி செய்து வந்த நிறுவனம் சமீப காலமாக ஆயிரக் கணக்கில் மட்டுமே வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கானவை ஆகும். இதுமாதிரியான இக்கட்டான சூழ்நிலையால் தொடர் நிதியிழப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டது. எனவே இதனை சமாளிக்கும் பொருட்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட்டு வெளியேறியது.

இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தமிழக முதலமைச்சர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ஃபோர்டு ஆலையை கையகப்படுத்தும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. மாநிலத்தில் முதலீட்டை ஈர்க்கும் பொருட்டு தற்போது ஆளும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போதைய பேச்சுவார்த்தையும் நடை பெற்றிருக்கின்றது.

தற்போது டாடா நிறுவனம் இந்தியாவில் பஞ்ச் எனும் புதுமுக மைக்ரோ எஸ்யூவி ரக காரை இந்தியாவில் களமிறக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மிக சமீபத்தில் நிறுவனம் இக்காரை வெளியீடு செய்தது. இக்காரின்மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வந்த நிலையில் வெளியீட்டு நிகழ்வை டாடா கடந்த 4ம் தேதி செய்தது. இதைத்தொடர்ந்து, மிக விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தையும் நிறுவனம் செய்ய இருக்கின்றது. தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே இக்கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுக்கின்றது. ஏற்கனவே பஞ்ச் காருக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கிவிட்டன. ரூ.21,000 ஆயிரம் என்ற முன்-தொகையில் காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








