இப்படி ஒரு பிரம்மாண்ட வளர்ச்சியா? டாப் கியரில் டாடா ஹாரியர் கார் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?
இந்தியாவில் டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் டாடா ஹாரியர் எஸ்யூவி கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் டாடா எதிர்பார்த்த அளவிற்கு ஹாரியர் எஸ்யூவி விற்பனையாகவில்லை. இதன்பின் சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்களுடன், பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்ட ஹாரியர் எஸ்யூவியை, கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா அறிமுகம் செய்தது.

இந்த அப்டேட்கள் காரணமாக டாடா ஹாரியர் எஸ்யூவியின் விற்பனை உயர்ந்து வருகிறது. இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 2,443 ஹாரியர் எஸ்யூவிகளை டாடா விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 719 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 240 சதவீத வளர்ச்சியை டாடா ஹாரியர் பதிவு செய்துள்ளது.

இது மிக பிரம்மாண்ட விற்பனை வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனை செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவியின் பிஎஸ்-4 வெர்ஷன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில், 2.0 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியதாக இருந்தது.

ஆனால் அதன்பின் வந்த பிப்ரவரி மாதத்தில் ஹாரியர் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் மேம்படுத்தியது. ஹாரியர் எஸ்யூவியில் பவர் குறைவாக உள்ளது என்பது போன்ற பிரச்னைகளை இந்த புதிய மாடலில் டாடா மோட்டார்ஸ் நிவர்த்தி செய்தது. இந்த குறைபாடுகளால்தான் டாடா ஹாரியர் எஸ்யூவியின் விற்பனை பாதிக்கப்பட்டு வந்தது. எனினும் அந்த பிரச்னைகளுக்கு டாடா தீர்வு கண்டது.

பிஎஸ்-4 மாடலில் இருந்த அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் டாடா ஹாரியர் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பை போல் அல்லாமல், அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் டார்க் திறன் முன்பை போலவே 350 என்எம் -ஆக தொடர்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பிஎஸ்-4 மாடலில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பிஎஸ்-6 மாடலில், ஆப்ஷனல் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் தேர்வும் வழங்கப்பட்டுள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவியின் விற்பனை உயர்ந்துள்ளதற்கு, இந்த அப்டேட்கள் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன.

இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவி போட்டியிட்டு வருகிறது. இதில், எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய எஸ்யூவி கார்களின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள், கடந்த ஜனவரி மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

அதே சமயம் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடல் வரும் மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. அனேகமாக வரும் ஏப்ரல் மாதம் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் மாதங்களில் இந்த செக்மெண்ட்டில் கடும் போட்டி ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








