டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி காரின் அறிமுகம் இந்த ஆண்டிற்குள் இருக்கும்!! வெளிவந்த உறுதியான தகவல்!
எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி காரின் அறிமுகம் இந்த 2021ஆம் ஆண்டில் தான் இருக்கும் என்று டாடா உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கான புதிய மினி-எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்பட்டுவரும் விஷயம் நமக்கு தெரிந்ததுதான். இந்த காருக்கு தற்போதைக்கு 'எச்பிஎக்ஸ்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் எச்பிஎக்ஸ் எஸ்யூவி கான்செப்ட் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இந்த எஸ்யூவி கார் இந்தியாவின் பல்வேறு சாலைகளில் பல மாதங்களாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி காரை இந்த ஆண்டிற்குள் அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்திவிட்டதாக கார்வாலே செய்திதளம் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

உட்புறத்தில் சில கண்ட்ரோல்களுடன் 3-ஸ்போக் தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உடன் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுவரவுள்ள இந்த காரின் டேஸ்போர்டு கருப்பு மற்றும் சில்வர் நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த டேஸ்போர்டின் மையத்தில் மற்றும் இரு முனைகளிலும் செவ்வகம் வடிவிலான ஏசி துளைகளை எதிர்பார்க்கலாம். காரின் முன்பக்கத்தில் டாடா கார்களின் வழக்கமான இரட்டை ஹெட்லேம்ப் செட்அப்-ஐ மேற்புறத்தில் எல்இடி டிஆர்எல்களுடன் பெற்றுவரும்.

இவற்றுடன் கருப்பு நிறத்தில் நேர்த்தியான வடிவில் முன்பக்க க்ரில், மத்தியில் காற்று ஏற்பான், அதற்கு கீழே பம்பர் உள்ளிட்டவை வழங்கப்படும். டாடா எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (டாப் ட்ரிம்-இல் மட்டும்) தேர்வுகளாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








