1ரூபா செலவில்லாம Punch காரை ஓட்டி போகலாம்... ரொம்ப ஈசியான போட்டியை அறிவித்த Tata! யார் வேணாலும் கலந்துக்கலாம்!
Tata Punch காரை இலவசமாக ஓட்டி செல்வதற்கான வாய்ப்பை தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதற்காக 'பஞ்சதான்' எனும் போட்டியை நிறுவனம் நாட்டில் தொடங்கி வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதன் பஞ்ச் (Punch) புதுமுக மைக்ரோ எஸ்யூவி ரக காரை நேற்றைய (ஆகஸ்டு 4) தினம் இந்தியாவில் வெளியீடு செய்தது. பட்ஜெட் வாகன பிரியர்களைக் கவரும் வகையில் இந்த மைக்ரோ எஸ்யூவி கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பஞ்ச் காரை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பஞ்சதான் (PUNCHATHON) எனும் போட்டியை நிறுவனம் இணையத்தின் வாயிலாக தொடங்கி வைத்துள்ளது. இப்போட்டியில் வெல்லும் வாடிக்கையாளர்களுக்கு இலவசாக பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி கார் வழங்கப்பட இருக்கின்றது.

போட்டியாளர்கள் செய்ய வேண்டியவை:
டாடா பஞ்ச் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர வேண்டும். தொடர்ந்து, பஞ்சதான் பிட்ஸ்டாப்பிற்கு நேரடியாக செல்ல வேண்டும். அங்கு இருக்கும் பஞ்ச் கார் முன் நின்று அக்காரை குறுகிய ரிவியூ வீடியோ செய்ய வேண்டும். எடுக்கப்பட்ட வீடியோவை தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு வாயிலாக #TataPUNCH எனும் டேக்கின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

இத்துடன், tatapunchofficial பக்கத்தையும் அப்பதிவுடன் டேக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் ஓர் நபரை டாடா மோட்டார்ஸ் தேர்வு செய்து அவருக்கு பஞ்ச் காரை வழங்க இருக்கின்றது. இப்போட்டி இன்று (அக்டோபர் 5) தொடங்கி வரும் 8ம் தேதி நடைபெறும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்போட்டியில் குறிப்பிட்ட சில நகரவாசிகளால் மட்டுமே பங்கற்க முடியும் என்ற நிலை தென்படுகின்றது. ஆம், டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கும் பஞ்ச் காருக்கான பிட்ஸ்டாப் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொச்சி, லக்னோ, ராஞ்சி, அஹமதாபாத், கொச்சி, ஜெய்பூர் மற்றும் சண்டிகர் மாநிலங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

ஆகையால், அந்தந்த நகரத்தில் வசிக்கும் நபர்களால் இந்த போட்டியில் கலந்துக் கொள்ள முடியும். வெற்றி பெற்றவர்கள் பற்றிய தகவலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சமூக வலைதளம் பக்கம் வாயிலாக விரைவில் வெளியிடும் என தகவல் வெளியிட்டிருக்கின்றது. வெற்றி பெற்றவர்கள் அவர்களது புகைப்பட அடையாள அட்டை, பேன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு, பிறப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

அவை சரிபார்க்கப்பட்ட பின்னர் வெற்றியாளர்களுக்கு டாடா பஞ்ச் வழங்கப்படும். டாடா பஞ்ச் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ்ட் மற்றும் கிரியேட்டீவ் ஆகியவையே அவை ஆகும். இதில் எந்த வேரியண்டை 'பஞ்சதான்' போட்டியாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவலை டாடா நிறுவனம் வெளியிடவில்லை.

இந்த கார் ரூ. 5.50 லட்சம் என்ற குறைவான விலையில் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இக்காரின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிக விரைவில் காரின் விலை குறித்த தகவலை டாடா மோட்டார்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், பஞ்சதான் போட்டிக்கு பல்வேறு விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ தகவலை அறிந்துக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி இந்திய சந்தையில் மஹிந்திரா கேயூவி100 மற்றும் மாருதி சுசுகி இக்னிஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் வெளியீட்டைப் பெற்றிருக்கின்றது. இந்த கார் தற்போது விற்பனையில் இருக்கும் அல்ட்ராஸ் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக காரை போல் அதிக பாதுகாப்பான வாகனமாக இருக்கும் என தெரிகின்றது.

ஏனெனில், அல்ட்ராஸ் காரை உருவாக்கி வரும் ஆல்ஃபா கட்டமைப்பு தளத்தில் வைத்தே பஞ்ச் காரை டாடா உருவாக்கி வருகின்றது. ஆகையால், அல்ட்ராஸ் காரின் பாதுகாப்பு தரம் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா அல்ட்ராஸ் ஓர் பாதுகாப்பு திறனில் ஐந்து நட்சத்திர ரேட்டிங் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிகோர், டியாகோ மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார் மாடல்களில் வழங்கப்பட்டும் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் தேர்வே பஞ்ச் காரிலும் வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன், டர்போசார்ஜட் எஞ்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








