டாடா கார்களின் விலை உயர்வது உறுதி! வணிக வாகனங்களை அடுத்து பயணிகள் வாகனங்களின் விலையையும் உயர்த்த டாடா திட்டம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அண்மையில் அதன் வணிக பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது பயணிகள் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களின் (கார்களின்) விலையையும் உயர்த்த நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த தகவல் இந்திய வாகன பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அண்மையில் அதன் வணிக வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டது. 2.5 சதவீதம் வரை விலை உயர்வு செய்ய இருப்பதாக அந்த அறிவிப்பின் வாயிலாக நிறுவனம் தெரிவித்தது. இந்த புதிய விலை உயர்வு 2022ம் ஆண்டிற்கான பரிசாக ஆண்டின் முதல் மாதம் ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கின்றது.

இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி சில நாட்களே ஆகின்ற நிலையில் தற்போது மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. அதாவது, டாடா நிறுவனம் பயணிகள் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

இதன் விளைவாக நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களின் விலை கணிசமாக உயர்வை பெற இருக்கின்றது. விலை உயர்வானது வரும் ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் ( Nexon), ஹாரியர் (Harrier), சஃபாரி (Safari), அல்ட்ராஸ் (Altroz), டிகோர் (Tigor) மற்றும் டியாகோ (Tiago) ஆகிய கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இதில் சஃபாரி எஸ்யூவி காரின் விலை மிக சமீபத்திலேயே அதிகரிக்கப்பட்டது. இந்த மாடலில் தானியங்கி கியர்பாக்ஸ் வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் தேர்வுகளின் விலை மட்டுமே உயர்வு செய்யப்பட்டிருக்கின்றன. ரூ. 2 ஆயிரம் தொடங்கி ரூ. 7 ஆயிரம் வரையில் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே விரைவில் பிற தயாரிப்புகளின் விலையையும் உயர்த்தும் நடவடிக்கையில் டாடா மோட்டாராஸ் களமிறங்கியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும் என கூறப்படுகின்றது. டாடா நிறுவனம் நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய கார் மாடல்களில் மின்சார தேர்வை வழங்கி வருகின்றது.

இதில், டிகோர் இவி மின்சார காரே இந்தியாவின் குறைந்த விலை மின்சார காராகும். இக்கார் இந்தியாவில் ரூ. 11.99 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றின் விலையும் உயர்த்தபட இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ஒட்டுமொத்த மின் வாகன பிரியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து சமீபத்திய அறிமுகமான பஞ்ச் (Punch) மைக்ரோ எஸ்யூவியின் விலையும் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. வரும் ஜனவரி மாதமே இதன் விலை உயர்வு பற்றிய தகவல் தெரிய வரும். இதேபோல், டாடா மோட்டார்ஸ் அதன் பயணிகள் வாகனங்களின் விலையில் எவ்வளவு உயர்வு செய்ய இருக்கின்றது என்பது பற்றிய தகவலும் வெளியாகவில்லை.

புதிய விலையுயர்விற்கு டாடா, வாகன கட்டுமானத்திற்கு உதவும் மூலப் பொருட்கள் மற்றும் உள்ளீடுகளின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைக் காரணம் காட்டியிருக்கின்றது. இதே காரணத்தை இன்னும் சில நிறுவனங்களும் விரைவில் அதன் கார்களின் விலையை இந்தியாவில் உயர்த்த இருக்கின்றன குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுசுகி, சிட்ரோன், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஆகிய நிறுவனங்களே கார் கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் காரணம் காட்டி வரும் ஜனவரி முதல் தங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே தனது புதிய அறிவிப்பின் வாயிலாக டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்திருக்கின்றது.

அடுத்தடுத்தாக இந்நிறுவனங்கள் விலை உயர்வு குறித்து அறிவித்து வருவது இன்னும் சில நிறுவனங்களையும் விலை உயர்வு பற்றிய அறிவிப்பை பற்றி அறிவிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வு அனைத்து நிறுவனங்களும் சந்தித்து வரும் பிரச்னையாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








