கமர்ஷியல் வாகன வாடிக்கையாளர்களுக்கு டாடாவின் ‘குட்’ நியுஸ்!! வாரண்டி & ஃப்ரீ சர்வீஸுக்கு கூடுதல் கால அவகாசம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் கமர்ஷியல் வாகனங்களுக்கான உத்தரவாதம் மற்றும் இலவச சேவையை நீட்டித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பரவலினால் நமது அன்றாட வாழ்க்கை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே முற்றிலுமாக மாறிவிட்டது. இடையில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்புவது போல் இருந்தது.

ஆனால் மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பலரது வாழ்க்கை மீண்டும் ஊரடங்கிற்குள் சிக்கியுள்ளது. இதன் காரணமாகவே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு உத்தரவாதம் மற்றும் இலவச சேவை காலத்தை நீட்டித்து வருகின்றன.

இந்த வகையில் தற்போது டாடா அறிவித்துள்ள இந்த கால நீட்டிப்பின்படி கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதிக்குள் உத்தரவாதம் மற்றும் இலவச சேவைக்கான காலம் முடியும் தருவாயில் உள்ள டாடாவின் கமர்ஷியல் வாகன உரிமையாளர்கள் பயன்பெற முடியும்.

அதாவது, இந்த ஊரடங்கினால் தனது டாடா கமர்ஷியல் வாகனத்திற்கான உத்தரவாதத்தையும், இலவச சேவையையும் பெற முடியவில்லையே என வாடிக்கையாளர்கள் வருந்த வேண்டாம். ஏனெனில் அவர்களுக்காகவே ஒரு மாத கால நீட்டிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தகைய உரிமையாளர்கள் மேற்கூறப்பட்ட சேவைகளுக்கான காலம் முடிவடைந்த போதிலும் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக அவற்றை பயன்படுத்தி கொள்ள முடியும். இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில், அதன் பயணிகள் வாகனங்களுக்கான உத்தரவாதம் மற்றும் இலவச சேவை காலத்தையும் இதேபோன்று ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

ஆனால் டாடாவின் பயணிகள் வாகனங்களை பொறுத்தவரையில், 2021 ஏப்ரல் 1ல் இருந்து நடப்பு மே 31ஆம் தேதிக்குள் உத்தரவாத மற்றும் சேவை காலம் முடியும் தருவாயில் உள்ளவர்களுக்காக மட்டுமே இந்த நீட்டிப்பு கொண்டுவரப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications








