வாடிக்கையாளர்களின் மனதில் பாலை வார்த்த டாடா மோட்டார்ஸ்... வாரண்டி-ஃப்ரீ சர்வீஸ் கால அவகாசம் நீட்டிப்பு!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் வாரண்டி மற்றும் ஃப்ரீ சர்வீஸ் கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் இந்தியாவை புரட்டிப் போட தொடங்கியுள்ளது. நாளொன்றிற்கு 4 லட்சம் வரை வைரஸ் பாதித்து வருகின்றது. இதனால், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன. இந்த அவல நிலையில் நாட்டின் சில குறிப்பிட்ட மாநிலங்களில் படுக்கை மற்றும் மருத்துவ கருவிகள் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. தொற்றின் வீரியத்தால் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களைவிட ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலை நிலவுகின்ற போதிலும் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்துவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகின்றது.

மீண்டும் ஒரு முறை நாடு தழுவிய முழு ஊரடங்கு கொண்டு வரும் பட்சத்தில் அது நாட்டின் பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையில் இன்னும் மத்திய அரசு இறங்கவில்லை. அதேசமயம் தமிழகம், கேரளா, ஆந்திரா, மஹராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாநிலங்கள் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பத்திருக்கின்றன.

இதனால், அந்தந்த மாநிலங்களை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் அனைத்து செயல்பாடுகளுக்கும் தற்காலிக இழுத்து மூடலை அறிவித்திருக்கின்றன. இந்த நிலை பெரும்பாலானோரைப் பாதிக்கச் செய்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வாரண்டி மற்றும் ஃப்ரீ சர்வீஸ் காலத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடி வருவதால் மக்கள் வெளியில் வர தயக்கம் காட்டிய வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, தற்போது பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் வெளியில் தலை காட்ட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே டாடா மோட்டார்ஸ் வாரண்டி காலம் மற்றும் சர்வீஸ் காலத்தை நீட்டித்திருக்கின்றது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் பல வாடிக்கையாளர்களுக்கு பராமரிப்பு சேவையினை திட்டமிட்டபடி வழங்க முடியவில்லை. வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் தொந்தரவில்லாத விற்பனைக்கு பிந்தைய சேவையை வழங்குவதற்காக, உத்தரவாதத்தையும், இலவச சர்வீஸ் காலமுத்தையும் நீட்டித்துள்ளோம்" என கூறியுள்ளது.

உங்கள் வாரண்டி அல்லது ஃப்ரீ சர்வீஸ் 2021 ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி 31 மே 2021க்குள் நிறைவு பெறுமானால், அதனை 2021 ஜூன் 30 வரை நீட்டித்து டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகையால், அய்யோ லாக்டவுண் காலத்தால் என்னுடைய வாரண்டியை க்ளைம் செய்ய முடியவில்லையே, ஃப்ரீ சர்வீஸ் செய்ய முடியவில்லையே என கலங்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications








