ரொம்ப ரொம்ப அதிக ரேஞ்ஜை தரும் ப்யூவல் பேருந்துகள்! டாடாவிடம் 15 யூனிட்டுகளை தர சொல்லிய ஐஓசிஎல்!
டாடா மோட்டார்சிடம் 15 ஹைட்ரஜன் ப்யூவல் செல் பேருந்துகளுக்கு இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் ஆர்டர் கொடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

சுற்றுச் சூழலுக்கு துளியளவும் மாசு ஏற்படுத்தாத வாகனங்களில் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் வாகனங்களும் ஒன்று. ஆகையால், மின்சார வாகனங்களுக்கு அடுத்தப்படியாக சுற்றுச்சூழலின் நண்பனாக செயல்படும் வாகனங்களில் ஒன்றாக ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் வாகனங்களும் கருதப்படுகின்றன.

இத்தகைய ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கக் கூடிய 15 பேருந்துகளையே தங்களுக்கு தயாரித்து வழங்குமாறு இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் (IOCL) தற்போது டாடா மோட்டார்சுக்கு பெரிய ஆர்டரை வழங்கியிருக்கின்றது. ஏலத்தின் வாயிலாக இந்த டெண்டரை தாங்கள் பெற்றிருப்பதாக டாடா நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெண்டருக்கான அழைப்பை ஐஓசிஎல் வெளியிட்டிருந்தது. இதில், டாடா உட்பட நாட்டின் முன்னணி நிறுவனங்கள் கலந்துக் கொண்டன. ஆனால், இதில் ஏலத்தில் டாடா வெற்றிப் பெற்றிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஆர்டர் டாடா மோட்டார்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

144 வாரங்களுக்கு உள்ளாக அனைத்து 15 ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கக் கூடிய பேருந்துகளையும் டெலிவரி கொடுக்குமாறு அந்த ஆர்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இன்னும் சில மாத இடைவெளியில் அனைத்து பேருந்துகளையும் டாடா டெலிவரி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து, ஐஓசிஎல்-இன் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து எதிர்காலத்தில் ப்யூவல் செல் வாகனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக டாடா அறிவித்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, விரைவில் டெலிவரி கொடுக்க இருக்கும் அனைத்து ஹைட்ரஜன் ப்யூவல் செல் பேருந்துகளையும் பராமரிப்பது, இயக்குவது உள்ளிட்ட பணிகளை தாங்களே மேற்கொள்ள இருப்பதாக டாடா தெரிவித்திருக்கின்றது.

இந்த நிகழ்வுகுறித்து டாடா நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவுத்துறை அதிகாரி கிரிஷ் வாஹ் கூறியதாவது, "டாடா மோட்டார்ஸ் இதுவரை 215 எலெக்ட்ரிக் பேருந்துகளை ஃபேம்1 திட்டத்தின்கீழ் டெலிவரி செய்திருக்கின்றோம். தொடர்ந்து, ஃபேம்2 திட்டத்தின்கீழ் 600 மின்சார பேருந்துகளை டெலிவரிக் கொடுக்கும் வாய்ப்பையும் நிறுவனம் பெற்றிருக்கின்றது" என்றார்.

ஹைட்ரஜன் ப்யூவல் செல் வாகனங்கள் மாசு உமிழ்வாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றும். இது ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் இயங்கக் கூடியது. ஆகையால், இது ப்யூவல் செல் வாகனமாக இருந்தாலும் மின்சாரத்தால் இயங்கும் வாகனமே.

ஆனால், மின் வாகனத்தைக் காட்டிலும் அதிக சிறப்பான வாகனமாக ப்யூவல் செல் வாகனம் இருக்கின்றது. ஏனெனில், ஓர் மின்சார வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு முதல் எட்டு மணி நேரங்கள் தேவைப்படும். வழக்கமான சார்ஜிங் நிலையங்களில் வைத்து சார்ஜ் செய்யும்போது இந்த அதிகபட்ச நேரம் தேவைப்படுகின்றது.

அதேசமயம், ப்யூவல் செல் வாகனங்களில் எரிபொருளை நிரப்ப வழக்கமான எரிபொருள் வாகனங்களில் ப்யூவலை நிரப்ப எவ்வளவு நேரம் தேவைப்படுகின்றதோ அந்த சில நிமிடங்களே போதும். தேவையான அளவு ஹைட்ரஜனை நிரப்பிக் கொள்ள முடியும்.

மேலும், ஹைட்ரஜன் ப்யூவல் செல் வாகனங்கள் மிக அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடியவையா இருக்கின்றன. உதாரணமாக டொயோட்டா நிறுவனத்தின் மிராய் ப்யூவல் செல் கார் ஒரு முறை டேங்க் ஃபில் செய்தால் ஆயிரம் கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








