ஃபவுண்டர்ஸ் எடிசன் மாடல்கள் அறிமுகம்! டாடா ஊழியர்களால் மட்டுமே வாங்க முடியும்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
டாடா ஃபவுண்டர்ஸ் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபவுண்டர்ஸ் எடிசன் மாடல்களை (Founders Edition) அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களிலும், ஃபவுண்டர்ஸ் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், டிகோர், டியாகோ, நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் ஹாரியர் கார்கள் அடங்குகின்றன.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் மற்றும் நினைவு கூறும் விதமாக இந்த புதிய ஃபவுண்டர்ஸ் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிறிய அளவில் மாற்றப்பட்ட லோகோ மற்றும் ஜேஆர்டி டாடாவின் கையெழுத்துக்களுடன் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த 2 அம்சங்களை தவிர, மற்றபடி அனைத்து ஃபவுண்டர்ஸ் எடிசன் மாடல்களும் தங்களது ரெகுலர் மாடல்களை போலவேதான் உள்ளன. லோகோவை பொறுத்தவரை, அனைத்து ஃபவுண்டர்ஸ் எடிசன் மாடல்களிலும், நீல நிற பின்னணியில் டாடா எம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பின் பக்க பில்லர் மற்றும் உட்புறத்தில் டேஷ்போர்டு ஆகிய பகுதிகளில் ஜேஆர்டி டாடாவின் கையெழுத்தையும் காண முடிகிறது.

ஆனால் டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே ஃபவுண்டர்ஸ் எடிசன் மாடல்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் எந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என்றாலும், விருப்பம் இருந்தால் ஆன்லைன் மூலமாக ஃபவுண்டர்ஸ் எடிசன் மாடல்களை முன்பதிவு செய்யலாம்.

மேற்குறிப்பிட்ட அப்டேட்களை தவிர, இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்களில் வேறு எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. அனைத்து ஃபவுண்டர்ஸ் எடிசன் மாடல்களிலும், ஸ்டாண்டர்டு மாடல்களில் உள்ள அதே வசதிகள், உபகரணங்கள் மற்றும் இன்ஜின் தேர்வுகள்தான் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து தனது கார்களை புதுப்பித்து கொண்டே வருகிறது. அத்துடன் பல்வேறு புதிய தயாரிப்புகளையும் தொடர்ச்சியாக களமிறக்கி கொண்டுள்ளது. இதன்படி டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கின் ஐ-டர்போ மாடல் கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய சஃபாரி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய டாடா சஃபாரி வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய டாடா சஃபாரியை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

அப்போது இந்த கார் பல்வேறு அம்சங்களில் எங்களை வெகுவாக கவர்ந்தது. எனவே சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், புதிய டாடா சஃபாரி இந்திய வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும். இந்த புதிய மாடலின் விலை அறிவிப்பை இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது ஆவலுடன் எதிர் நோக்கி காத்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications