கார் ஒன்றின் மூலம் ரூ.45 ஆயிரம் வரையில் லாபத்தை பெறுகிறதா டாடா? மாருதி சுஸுகியை காட்டிலும் இரண்டு மடங்காம்!
பயணிகள் கார்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது. இண்டிகாவில் ஆரம்பித்த இந்த வெற்றி பயணம் இன்று வரை தொடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் தற்சமயம் பலர் விரும்பி செல்லக்கூடிய பிராண்ட்களுள் ஒன்றாக டாடா உருவெடுத்துள்ளது.

தற்சமயம் டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்யும் பெரும்பாலான கார்கள் 2016க்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும். கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆன போதிலும், அவற்றை புதிய தலைமுறை அப்டேட்களுடன் டாடா நிறுவனம் புத்துணர்ச்சி உடன் வைத்துள்ளது. 2016க்கு முன்பு விற்பனை செய்த மாடல்கள் அனைத்தையும் டாடா நிறுவனம் ஏற்கனவே நிறுத்தி கொண்டது.

2016க்கு பிறகு டாடா பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களாக டிகோர், நெக்ஸான், ஹெரியர், சஃபாரி மற்றும் பஞ்ச் உள்ளிட்டவை உள்ளன. இவை அதன் பிரிவுகளில் அதிகம் விற்பனையாகும் முதன்மையான மாடல்களாக உள்ளன. அதிக தொழிற்நுட்ப அம்சங்களை தாண்டி, பயணிகளின் பாதுகாப்பு விஷயத்திலும் டாடா மோட்டார்ஸ் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

உலகளாவிய GNCAP மோதல் சோதனையில் டாடா நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் பஞ்ச் கார்கள் முழு 5 மதிப்பெண்களையும் பெற்று பலரை கவர்ந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது ET Auto செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தலைமை போல் விளங்கும் மாருதி சுஸுகியை காட்டிலும் ஒரு கார் மூலமாக அதிக இலாபத்தை டாடா மோட்டார்ஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செய்தியில், நடப்பு 2021-22 நிதியாண்டின் இரண்டாம் கால்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு கார் மூலமாக டாடா மோட்டார்ஸ் ரூ.45,810 இலாபத்தை பெற்றுள்ளதாகவும், இது மாருதி சுஸுகி நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட இரட்டிப்பானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தை காட்டிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு காரின் மூலம் அதிக வருமானத்தை பார்த்துள்ளது கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை.

டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன பிரிவின் செயல்பாட்டு வரம்புகள் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளன. மறுப்பக்கம், மாருதியை பொறுத்தவரை இது 4.2% ஆக குறைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வணிகத்தின் செயல்பாட்டு இலாபமானது கடந்த செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகியின் 45%க்கு சமம்.

இருப்பினும், 2021-22 நிதியாண்டின் 2ஆம் கால்பகுதியில் மாருதி சுஸுகி மொத்தமாக விற்ற கார்களின் எண்ணிக்கையில் 22 சதவீத கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இலாபங்கள் மற்றும் விற்பனை அளவு ஆகியவற்றின் வளர்ச்சியானது நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை, வாடிக்கையாளர்களின் தேவை, நெகிழ்வுத்தன்மை மற்றும் சுறுசுறுப்பான உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலி உள்ளிட்டவற்றை சார்ந்துள்ளது.

தாமதமில்லாத டெலிவிரிகள் மற்றும் குறைவான காத்திருப்பு காலத்தை உறுதி செய்யும் வகையில் R&D எனப்படும் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு குழுவினரால் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பு பணிகள் ஆதரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக தற்சமயம் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு குழுவையே நம்பி உள்ளன.

ஏனெனில் குறைக்கடத்திகளுக்கு உலகளவில் தற்சமயம் ஏற்பட்டுவரும் அதிகப்படியான பற்றாக்குறைகளை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். இதனால் கடந்த மாதங்களில் வாகன தயாரிப்புகள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இது ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி, பல துறைகளில் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுவதற்கும் காரணமாக உள்ளது.

இருப்பினும் இன்னும் சில நாட்களில் இந்த நெருக்கடியான சூழ்நிலை மேம்படும் என்றே ஊகிக்கப்படுகிறது. மேலும் இது உற்பத்திக்கான வளங்களை பெரிய அளவில் மேம்படுத்தும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய மைக்ரோ-எஸ்யூவி மாடலாக பஞ்ச்-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியது. அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

எந்த அளவிற்கு என்றால், அறிமுகமான கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான டாடா பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் முதல் மாதத்திலேயே சிறந்த விற்பனை டாப்-10 கார்கள் லிஸ்ட்டில் இந்த மைக்ரோ-எஸ்யூவியால் நுழைய முடிந்துள்ளது.

ப்யூர், அட்வென்ச்சர், அக்கம்ப்ளிஷ்டு மற்றும் கிரியேட்டிவ் என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் பஞ்ச் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.49 லட்சத்தில் இருந்து ரூ.9.09 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








