டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ மற்றும் எம்டி நியமனம்... யார்னு தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக மார்க் லிஸ்டோசெல்லாவை (Marc Llistosella) நியமனம் செய்திருப்பதாக நேற்று (பிப்ரவரி 12) தெரிவித்துள்ளது. வரும் 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி, மார்க் லிஸ்டோசெல்லா பதவியேற்கவுள்ளார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி குண்டர் புட்செக், ஒப்பந்தத்தின் முடிவில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஜெர்மனிக்கு இடம்பெயர விரும்புகிறார். எனவே குண்டர் புட்செக்கிற்கு மாற்றாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக மார்க் லிஸ்டோசெல்லா பதவியேற்கவுள்ளார்.

முன்னதாக வரும் 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக தொடர வேண்டும் என டாடா மோட்டார்ஸ் போர்டு விடுத்த கோரிக்கையை குண்டர் புட்செக் ஏற்று கொண்டுள்ளார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனராக பதவியேற்கவுள்ள மார்க் லிஸ்டோசெல்லாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மார்க் லிஸ்டோசெல்லா இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உடையவர். அவர் கடந்த 2015-2018ம் ஆண்டு வரை மிட்சுபிஷி ஃப்யூஸோ ட்ரக் மற்றும் பஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதற்கும் முன்னதாக 2008-2014ம் ஆண்டு வரை டெய்ம்லர் ட்ரக்ஸ் ஆசியா நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சமீப காலமாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அதன் பயணிகள் வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக மிகவும் சிறப்பான நிலையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் பொறுப்பிற்கு வரவுள்ள மார்க் லிஸ்டோசெல்லா டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்பலாம்.

இதுகுறித்து டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கூறுகையில், ''மார்க் லிஸ்டோசெல்லாவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிகுந்த அனுபவம் உடையவர். தனது சிறப்பான கேரியரில், வர்த்தக வாகனங்களில் ஆழ்ந்த அறிவும், நிபுணத்துவமும் கொண்டவர். மேலும் இந்தியாவில் விரிவான செயல்பாட்டு அனுபவமும் உடையவர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிகத்தை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல மார்க் லிஸ்டோசெல்லா இந்த அனுபவத்தை பயன்படுத்துவார்'' என்றார். அத்துடன் கடைசி 5 ஆண்டுகளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்திய குண்டர் புட்செக்கிற்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் புதிய சஃபாரி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய டாடா சஃபாரி, ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. விலைகள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.


Click it and Unblock the Notifications








