டெஸ்லா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கப்போகிறதா டாடா மோட்டார்ஸ்? அதிகாரப்பூர்வ தகவல் இதுதான்...
டெஸ்லா-டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இடையே கூட்டணி அமையவுள்ளதாக வெளியாகி வந்த யூகங்கள் அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனமும் கூட்டணி அமைக்கவுள்ளதாக நடப்பாண்டு ஜனவரி மாதம் ஏகப்பட்ட யூகங்கள் வெளிவந்தன. இந்த கூட்டணிக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூட செய்திகள் வெளியானது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உயரவும், இந்த செய்திகள் ஒரு காரணமாக அமைந்தன.

பின் நாட்களில் இவை வெறும் யூகங்கள்தான் என தெரியவந்தது. இதன் காரணமாக அந்த செய்திகள் மதிப்பிழந்தன. ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், டெஸ்லா நிறுவனமும் கூட்டணி அமைக்கவுள்ளதாக தொடர்ந்து பலர் நம்பி கொண்டே இருந்தனர். இந்த குழப்பங்களுக்கு எல்லாம் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆம், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக டெஸ்லா நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி அமைக்கப்போவதில்லை. டெஸ்லா நிறுவனத்துடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதன் மூலம் அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொந்த பாதையில் பயணிக்கும் என டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். ''நாங்கள் சுயமாகவே செய்வோம்'' என்பதுதான் அவர் கூறிய சரியான வார்த்தைகள். எனவே நீண்ட நாட்களாக உலா வந்து கொண்டிருந்த யூகங்கள் தற்போது மதிப்பை இழந்துள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன துறையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பது நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எப்போது கார் விற்பனையை தொடங்கும்? என்பது தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்திய வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக, இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைவதற்கான பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகதான் டாடா மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் இடையேயான கூட்டணி தொடர்பான யூகங்கள் வெளிவந்தன.

தற்போது அந்த யூகங்களுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் காரை எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யும்? என்பது தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் இல்லை. ஆனால் நடப்பாண்டு அது நடந்து விடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா நிறுவனம் ஆரம்பத்தில் தனது கார்களை இறக்குமதி செய்துதான் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது. இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், இங்கேயே தொழிற்சாலை அமைத்து கார்களை உற்பத்தி செய்வது குறித்து டெஸ்லா நிறுவனம் பரிசீலனை செய்யும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டால், டெஸ்லா கார்களின் விலை குறையலாம்.


Click it and Unblock the Notifications








