ஒட்டுமொத்தமாக 10புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டாடா திட்டம்! எல்லாமே இன்னும் 5 வருசத்துல அறிமுகமாக போகுது!
டாடா மோட்டார்ஸ் வரும் 2025ம் ஆண்டிற்குள் பத்து புதிய மின்சார கார்களை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தற்போது நெக்ஸான் எஸ்யூவி கார் அடிப்படையில் மின்சார கார் ஒன்றை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. டாடா நெக்ஸான் இவி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் அந்த காரே நாட்டின் முதல் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகும்.

ஆகையால், இந்தியர்கள் மத்தியில் டாடா நெக்ஸான் இவிக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த நிலையில், நிறுவனம் மேலும் பத்து புதிய மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து புதிய வாகனங்களையும் வெளியீடு செய்யும் பணிகள் 2025ம் ஆண்டிற்குள் தொடங்கப்படும் என நிறுவனத்தின் மூத்த அதிகாரியான என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். புதிய மின்சார வானக உற்பத்திக்காக டாடா நிறுவனம் தற்போது ஐரோப்பிய செல் மேற்றும் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் கூட்டணி வைக்க தொடங்கியிருக்கின்றது.

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான வரவேற்பு கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஓராண்டில் மட்டும் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் இவி மட்டுமே 4 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

ஆகையால், எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்புகின்றது. இதனைத் தொடர்ந்தே 2025ம் ஆண்டிற்குள் 10 புதிய மின் வாகனங்களை களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

மேலும், நிறுவனம் தற்போது மென்பொருள் மற்றும் பொறியியல் திறன்களை மேம்படுத்தும் முயற்சியிலும் களமிறங்கியிருப்பதாக டாடா நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்திருக்கின்றார். உலக சந்தைக்கு ஏற்ப இணைக்கப்பட்ட (Connected) மற்றும் தன்னாட்சி (Autonomous) வாகனங்களை உருவாக்கும் வகையில் இந்த பணியில் டாடா மோட்டார்ஸ் களமிறங்கியிருக்கின்றது.

தொடர்ந்து, தனது மற்று கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து வாகன மாடல்களையும் மின்சார வெர்ஷனுக்கு மாற்றவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. அதாவது, பெட்ரோல், டீசல் எஞ்ஜின் கொண்ட வாகன உற்பத்தியை முழுமையாக கைவிட்டுவிட்டு மின் வாகன உற்பத்தியை மட்டுமே பிராண்டின்கீழ் மேற்கொள்ள டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

2030ம் ஆண்டு என்ற கால அவகாசத்தை இதற்காக டாடா நிர்ணயித்துள்ளது. இதுமட்டுமின்றி 2025ம் ஆண்டிற்குள் மின்வாகன உற்பத்தி 60 விழுக்காடாக மாற்றவும் நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருக்கின்றது. டாடா நெக்ஸான் இவி ரூ. 13.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் மிக மிக குறைந்த விலை ஆகும்.


Click it and Unblock the Notifications








