சேல்ஸ் தூள் கௌப்புது... காரணம் தெரிஞ்சா உங்க வீட்லயும் அடுத்து டாடா கார்தான்... வேற எதையும் யோசிக்க மாட்டீங்க
இந்தியாவில் டாடா கார்களின் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய புத்தம் புதிய கார்களை கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுதவிர டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

கொரோனா பிரச்னை காரணமாக 2020ம் ஆண்டின் முதல் பாதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், கடைசி 5, 6 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சரிவில் இருந்து வலுவாக மீண்டு வந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்தது. அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் உள்பட டாடா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த புதிய கார்கள்தான் இதற்கு முக்கியமான காரணம்.

இதன் மூலம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஒவ்வொரு மாதமும் டாடா மோட்டார்ஸ் நிலையாக மூன்றாவது இடத்தை பிடித்து வருகிறது. பண்டிகை காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், 2020ம் ஆண்டின் கடைசி மாதத்திலும் அதே உத்வேகத்தை டாடா மோட்டார்ஸ் தொடர்ந்துள்ளது.

ஆம், கடந்த டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 23,546 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில் 21,640 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இது 9 சதவீத வளர்ச்சியாகும்.

அதுவே கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 84 சதவீதம் என்ற மிக பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 12,785 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சியின் மூலம், இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், மஹிந்திரா, கியா, ரெனால்ட், ஹோண்டா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு முன்னதாக டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் வழக்கம் போல மாருதி சுஸுகியும், ஹூண்டாயும் உள்ளன.

பாதுகாப்பு தொடர்பாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வே டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை அதிகரித்து வருவதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, நெக்ஸான் மற்றும் ஹாரியர் உள்ளிட்ட கார்கள் சாலை விபத்துக்களில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய இரண்டு கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளன.

தற்போதைய நிலையில் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற 2 கார்களை வைத்துள்ள ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமை டாடாவிற்கு உள்ளது. விளம்பரங்களிலும் கூட கார்களின் பாதுகாப்பு அம்சங்களைதான் டாடா முன்னிலைப்படுத்துகிறது. எனவே டாடா கார்களில் கிடைக்கும் பாதுகாப்பே, இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








