மாஸ் காட்றாங்க... டாடாவை பார்த்து வெலவெலத்து போன போட்டி நிறுவனங்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது போட்டியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 33,926 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை வெறும் 23,600 மட்டுமே. இதன் மூலம் வருடாந்திர ரீதியில் விற்பனையில் 44 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் 25,729 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த அக்டோபர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 33,926 ஆக உயர்ந்துள்ளது. எனவே மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 32 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ், அதன் விளைவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள், செமி கண்டக்டர் பற்றாக்குறை என இந்திய ஆட்டோமொபைல் துறை சமீப காலமாக பல்வேறு பிரச்னைகள் சந்தித்த வண்ணம் உள்ளது. இருப்பினும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் தொடர்ச்சியாக மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருவதற்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பாதுகாப்பு தொடர்பாக அதிகரித்து வரும் விழிப்புணர்வுதான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் முதன்மையானது என்ற பெயரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.

அந்த நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய இரண்டு கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் ஏற்கனவே 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. இந்த வரிசையில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா பன்ச் காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று வரலாறு படைத்துள்ளது.

பாதுகாப்பில் அசத்துவதுடன், மிகவும் குறைவான விலையில் டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் கார், மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி லைன் அப்பில், நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு கீழாக பன்ச் கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்ட்டின் விலை, அதாவது இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 5.49 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது மிக சவாலான விலை நிர்ணயமாக கருதப்படுகிறது.

எனவே இனி வரும் காலங்களில் பன்ச் கார் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிக சிறப்பான விற்பனை எணணிக்கை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

வரும் காலங்களில் பன்ச் காரின் சிஎன்ஜி மாடலையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே டிகோர் மற்றும் நெக்ஸான் ஆகிய ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த வரிசையில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தற்போதே இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் எதிர்காலத்திற்கும் வலுவான திட்டங்களை வகுத்து வருவதால், எலெக்ட்ரிக் கார் சந்தையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அசைக்க முடியாத இடத்தை பிடிக்கலாம். டாடாவின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சி போட்டி நிறுவனங்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








