ஜாகுவார் லேண்ட்ரோவரால் தடுமாற்றம் கண்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள்... காரணம் இதுதான்!
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் வருவாய் மதிப்பீடு குறித்த தகவலால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை திடீரென சரிவு கண்டது. இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தையில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்று வருவதே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. குறிப்பாக, பயணிகள் வாகன விற்பனையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளை உற்று கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு நேற்றுமுன்தினம் (செவ்வாய் கிழமை) பிற்பகல் தடாலடியாக குறைந்தது. தேசிய பங்கு சந்தையில் 10 சதவீதம் வரையிலும், மும்பை பங்கு சந்தையில் 8.29 சதவீதம் குறைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பங்கு சந்தையிலும் இந்த விஷயத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் வருவாய் குறித்தத வெளியானத் தகவல்தான் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு திடீரென வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

அதாவது, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு காலத்தைவிட இரண்டாவது காலாண்டு காலத்தில் (ஜூன்- ஆகஸ்ட்) கார் உற்பத்திக்கு தேவைப்படும் சிப் எனப்படும் மின்னணு உதிரிபாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக, ஜாகுவார் லேண்ட்ரோவர் வருவாயில் அதிக பின்னடைவு இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் கணிப்பு வெளியிட்டது.

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களுக்கான தேவை தொடர்ந்து வலுவான நிலையில் இருந்தாலும், சிப் பிரச்னை காரணமாக ஒரு பில்லியன் பவுண்ட் மதிப்புக்கு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக டாடா மோட்டார்ஸ் கணிப்பு வெளியிட்டது.

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் வருவாயில் பின்னடைவு ஏற்படும் என்று கூறிய காரணத்தால், அந்நிறுவனத்தின் வருவாயிலும் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாகவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு நேற்று திடீரென குறைய காரணமாக அமைந்தது.

அதேநேரத்தில், சிப் எனப்படும் மின்னணு உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு இருந்தாலும், கார்களுக்கான தேவை மற்றும் வர்த்தகம் வரும் மாதங்களில் வலுவாக இருக்கும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால், இன்று டாடா மோட்டார்ஸ் பங்குகள் மதிப்பு சற்றே உயரத் துவங்கி முதலீட்டாளர்களை ஆசுவாசப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








