கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
கோவிட்-19 வைரஸ் தடுப்பூசிகளைப் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் விநியோகிக்க புதிய டிரக் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய வாகன உலகின் ஜம்பவான் என்றழைக்கப்படும் டாடா மோட்டார்ஸ் புதிய குளிர்சாதன வசதிக் கொண்ட டிரக் ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுமுக டிரக்கினை பிரத்யேகமாக கோவிட்-19 வைரசுக்கான தடுப்பூசிகளை (வேக்சினை) கையாளுவதற்கான வசதிகளுடன் டாடா உருவாக்கியிருக்கின்றது.

கோவிட்-19 வைரசை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர்க்கு தடுப்பூசி போட்டப்பட்டிருக்கின்றது. இதனை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான முறையில் தடுப்பூசி மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு ஏதுவான புதிய டிரக்கை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்த வேகத்தில் சென்றாலும் தடுப்பூசிகளுக்கு சிறு துளி சேதாரம்கூட ஏற்படாத வகையிலேயே இந்த டிரக் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இஞ்ஜினியரிங், வடிவமைப்பு என அனைத்திலும் மருந்துகளைப் பத்திரமாகக் கையாளுகின்ற வகையிலான வசதிகளையே டாடாவின் இந்த புதுமுக டிரக் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, தடுப்பூசிகளைப் பதப்படுத்துவதற்கு குளிரூட்டி தேவையென்பதால் இந்த டிரக்கில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

இது மருந்துகளைப் பதப்படுத்துவதற்கு ஏதுவான குளிர்ச்சியைத் தொடர்ச்சியாக வழங்கும். அளவு மற்றும் எடையைப் பொருத்து இந்த வாகனத்தை விற்பனைக்குக் வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

ஆகையால், டிரக் ரகத்தில் மட்டுமின்றி சிறிய உருவம் மற்றும் பிக்-அப் டிரக் ரேஞ்ஜிகளிலும் டாடாவின் இந்த தடுப்பூசியை ஏற்றிச் செல்லும் வாகனம் விரைவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரியவந்திருக்கின்றது. தொடர்ந்து, இந்த டிரக்கின் விற்பனையை எளிமைப்படுத்தும் விதமாக அரசின் இ-மார்க்கெட் (GeM)தளத்திலும் டாடா மோட்டார்ஸ் இதனை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

டாடாவின் இந்த சிறப்பு திறன் கொண்ட மருந்துகளைக் கையாளும் வாகனத்தைப் பயன்படுத்தி நாட்டின் அனைத்து மூலை முடக்குகளுக்கும் கோவிட்-19 வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை மிக சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். எனவேதான் இந்த வாகனத்தின் அறிமுகத்தை டாடா நிறுவனம் பெறுமிதமாக பார்க்கின்றது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வணிக வாகன வர்த்தக பிரிவு தலைவர் கிரிஷ் வாக் கூறியதாவது, "தடுப்பூசியின் முதல் கட்டத்தை வெளியிடுவதற்கு நாடு தயாராகி வருகின்றது. இந்த சூழ்நிலையில் மருந்துகளைக் கையாள உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாடு முழுவதும் தடுப்பூசிகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் விநியோகிக்க பங்களிப்பு செய்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications