போச்சு... அடுத்த வாரம் டாடா கார்களின் விலையும் உயர போகுது... எவ்ளோ உயரபோகுது தெரியுமா?
டாடா நிறுவனம் அதன் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

டொயோட்டா நிறுவனம் அதன் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றான இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி ரக காரின் விலையை உயர்த்த இருப்பதாக சற்று முன் அறிவிப்பு வெளியிட்டது. 2 சதவீதம் வரை விலையுயர்வு செய்யப்பட இருப்பதாக அறிக்கையின் வாயிலாக தகவல் வெளியிட்டுள்ளது, டொயோட்டா.

டொயோட்டா அறிவித்திருக்கும் புதிய விலையுயர்வானது ஆகஸ்டு மாதம் 1ம் தேதி முதல் அமலாக இருக்கின்றது. இந்நிறுவனத்தின் விலையுயர்வு அறிவிப்பு இந்திய எம்பிவி ரக வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள்ளாகவே மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளி வந்திருக்கின்றது.

இந்த முறை டாடா நிறுவனம் அதன் விலை அதிகரிப்பு பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. நடப்பு மாதத்தின் ஆரம்பத்திலேயே விலையுயர்வு பற்றிய தகவலை டாடா வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனைத்தொடர்ந்து, தனது தயாரிப்புகளின் விலையை அடுத்த வாரம் முதல் உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதாவது, ஆகஸ்டு 1ம் தேதி முதல் புதிய விலையுயர்வு அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலோகம் மற்றும் வாகன தயாரிப்பிற்கான முக்கிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், மாருதி சுசுகி மற்றும் ஹோண்டா உள்ளிட்ட நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளன. மாருதி சுசுகி அதன் ஸ்விஃப்ட் மற்றும் அனைத்து சிஎன்ஜி கார்களின் விலையையுமே ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தின என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அடுத்த வாரம் முதல் புதிய விலையில் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என்ற தகவலை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. டாடா நிறுவனம் இதற்கு முன்னதாக 2021 மே மாதத்தில் 1.8 சதவீதம் வரை வாகனங்களின் விலையை உயர்த்தியது.

இதற்கு முன்பாக ஜனவரி மாதத்திலும் விலையை உயர்த்தியது. அப்போது ரூ. 26 ஆயிரம் வரை விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் டாடாவின் டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட கார்களின் விலை கணிசமான உயர்ந்தன. தற்போது மீண்டும் இவற்றின் விலை உயர இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாடா கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 2.5 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கின்றது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை வாட்டி வதைத்து வரும்நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பட்ஜெட் வாகன பிரியர்களை புது வாகனங்களின் பக்கமே ஒதுங்க செய்ய முடியாத வகையில் விலையுயர்வைச் செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








