இந்திய சந்தையில் ஒரு ஆண்டை நிறைவு செய்தது நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... அதற்குள் இத்தனை கார்கள் விற்பனையா?
இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இன்றுடன் (ஜனவரி 28) சரியாக ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. ஆம், கடந்த 2020ம் ஆண்டு இதே நாளில்தான் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 3,000 நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எலெக்ட்ரிக் கார்கள் அவ்வளவாக பிரபலம் இல்லாத ஒரு சந்தையில், இத்தனை நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருப்பது சிறப்பான ஒரு விஷயம்தான்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உள்ளது. அத்துடன் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், இதன் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் 64 சதவீத சந்தை பங்குடன், எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை உயர்ந்து வருவது, சுற்றுச்சூழலிலும் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு இணையான அளவில், கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வை குறைப்பதற்கான பொறுப்பை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஏற்று கொண்டுள்ளது.

இந்த சூழலில், நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள இந்த முக்கியமான தருணத்தை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உரிமையாளர்கள் தங்கள் அனுபவங்களை இந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் சிறப்பம்சங்கள் குறித்தும் பேசியுள்ளனர். மேலும் ஒரு முறை செய்த சார்ஜில் பெற்ற அதிகபட்ச ரேஞ்ச் (ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு) குறித்து வாடிக்கையாளர்கள் தெரிவித்த தகவல்களும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

முன்னதாக நேற்று முன் தினம் (ஜனவரி 26) டெல்லி செங்கோட்டையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் வாகனமும் கலந்து கொண்டது. இந்த வாகனத்தின் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்' என்ற மத்திய அரசின் திட்டத்தை விளம்பரப்படுத்தும் வகையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பவனி வந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களுக்கு, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் சவால் அளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








