டாடாவின் புதிய சர்வீஸ்... சஃபாரி காரை எப்பவுமே புதுசுபோல வச்சுக்களாம்... ஆண்டுகள் பல ஆனாலும்கூட மங்காது!!
டாடா நிறுவனம் சஃபாரி காருக்கு செராமிக் கோட்டிங் சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதுமுக அறிமுகமாக சஃபாரி எஸ்யூவி கார் இருக்கின்றது. அரசியல்வாதிகளின் மிகவும் பிரியமான கார் மாடல்களில் ஒன்றான இதனை நவீன காலத்திற்கு ஏற்ற ஸ்டைல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் டாடா மீண்டும் இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது.

இந்த காருக்கே செராமிக் பூச்சை செய்து தருவதாக டாடா அறிவித்துள்ளது. கூடுதல் கட்டணத்தின் அடிப்படையிலே இச்சேவையை தங்களின் சர்வீஸ் மையங்களிலேயே செய்து தருவதாக நிறுவனம் கூறியிருக்கின்றது. புதிய காரை வாங்கும்போது இதனை கூடுதல் தேர்வாக வழங்க இருப்பதாகவும் நிறுவனம் கூறியிருக்கின்றது.

செராமிக் கோட்டிங் என்பது ஒரு மேம்பட்ட ஹைட்ரோஃபிலிக் ஃபார்முலேஷன் தொழில்நுட்பம் ஆகும். இது வாகனத்தின் புது பொலிவைச் சிறிதும் சிதைய விடாமல் பாதுகாக்க உதவும். குறிப்பாக, வாங்கும் எப்படி பல பலவென வாகனம் இருக்குமோ அதேபோன்று புதிய பொலிவு குறையாமல் இருக்க இந்த பூச்சு பேருதவியாக இருக்கும்.

இத்துடன், பறவை மற்றும் பிற விலங்குகளின் எச்சத்தில் இருந்தும் காரின் மேற்புறத்தை செராமிக் பூச்சு காக்குகின்றது. தொடர்ந்து, அதிக மழை, கோடை கத்திரி வெயில், சேரு மற்றும் சகதி போன்றவற்றின் தீவிர தன்மையில் இருந்து இந்த பூச்சு வாகனத்தை காக்குகின்றது.

மேலும், இந்த செராமிக் கோட்டிங்கை அடிக்கடி செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. பல மாதங்களுக்கு ஒரு முறை செய்தாலே போதும் என்கின்றனர். ஒரு சிலர் இந்த கோட்டிங் ஆண்டுகளைக் கடந்தும் பலனளிப்பதாக தகவல்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த பெயிண்ட் பாதுகாவலனையே தன்னுடைய ஹோம் நிறுவனத்தின்கீழ் செய்து தருவதாக டாடா அறவித்திருக்கின்றது. இந்த பூச்சு வேலைக்கு ரூ. 28,500 என்ற கட்டணத்தை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதனை சஃபாரி எஸ்யூவி காருக்கு மட்டுமின்றி தன்னுடைய பிற தயாரிப்புகளுக்கும் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா அறிவித்துள்ளது.

ஆனால், அவற்றின் விலை மாறுபட்டு இருக்கும். மாடலைப் பொருத்து விலை அமைய இருக்கின்றது. செராமிக் பூச்சு பணிக்காக நாங்கள் (டாடா மோட்டார்ஸ்) 3எம், வூர்த், பர்தால் மற்றும் சிக்கந்த் ஸ்டான்லி பிஜி மற்றும் எஸ்கே கார் கேர் ஆகிய கார் பராமரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்திருப்பதாக டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன வணிக பிரிவு தலைவர் டிம்பிள் மேஹ்தா கூறியிருக்கின்றார்.

இதன்மூலம் வாடிக்கையாளர்களின் கவனத்தையும், அன்பையும் பெற முடியும் என டாடா நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், மதிப்புக்கூட்டப்பட்ட சேவையாக செராமிக் கோட்டிங் சேவையை இந்தியாவில் நிறுவனம் தொடங்கியிருக்கின்றது.

டாடா சஃபாரி எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 14.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்இ,எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி ப்ளஸ், எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகிய ஆறு விதமான ட்ரிம்களில் சஃபாரி தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இத்துடன், ஆறு மற்றும் ஏழு இருக்கை வசதி தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதுதவிர, அட்வென்சர் பெர்சோனா ட்ரிம்மையும் டாடா மோட்டார்ஸ் சஃபாரியில் வழங்கி வருகின்றது. இதன் விலை ரூ. 20.20 லட்சம் ஆகும். இது மேனுவல் கியர்பாக்ஸ் வசதியைக் கொண்ட மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதிலேயே ஆட்டோமேட்டிக் தேர்வும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதன் விலை ரூ. 21.45 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய அனைத்து ட்ரிம்களுக்கும் செராமிக் கோட்டிங்கை செய்து தருவதாக டாடா தற்போது அறிவித்திருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








