மின்சார வாகனங்களுக்காக 1,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைத்து டாடா பவர் நிறுவனம் அசத்தல்!
டாடா பவர் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் புதிய மைல்கல்லை கடந்து அசத்தி இருக்கிறது. மேலும், சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணியை விரைவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

நடப்பு தசாப்தம் மின்சார வாகனங்களுக்கான பொற்காலத்தை நோக்கிய முதல் படியாக மாறி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாகனங்களுக்கான முக்கியத்துவம் வெகுவாக அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றபடி, மின்சார வாகனங்களுக்கான வரவேற்பும் கூடி வருகிறது.

இந்த நிலையில், மின்சார வாகனத்தை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதி மிக குறைவாக இருப்பது, வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தயக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த தயக்கத்தை போக்குவதற்கும், பெட்ரோல் நிலையங்கள் போன்று சார்ஜ் ஏற்றும் நிலையங்களுக்கான தேவை குறித்தும் அறிந்த நிறுவனங்கள் இந்த துறையில் கால் பதித்துள்ளன.

அந்த வகையில், டாடா பவர் நிறுவனம் மின்சார வாகனங்களின் பேட்டரியை சார்ஜ் செய்யும் நிலையங்களை நாடுமுழுவதும் அமைத்து வருகிறது. மிகப்பெரிய மின்சார வாகன சார்ஜ் நிலையங்கள் கொண்ட கட்டமைப்பாக உருவாக்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், டாடா பவர் நிறுவனம் 1,000க்கும் மேற்பட்ட சார்ஜ் செய்யும் நிலையங்களை அமைத்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. இது இந்திய மின்சார வாகனத் துறையில் புதிய மைல்கல்லாக மட்டுமின்றி, முக்கிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

டாடா பவர் நிறுவனத்தின் பதிவு செய்யும் மின்சார வாகன உரிமையாளர்கள் மிக எளிதாக இனி தங்களது வாகனங்களுக்கு டாடா பவர் நிலையங்களில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். பெருந்திட்ட அலுவலக வளாகங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், வியாபார மையங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் வாடிக்கையாளர்கள் சேவையை பெறும் விதத்தில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 180 நகரங்களில் 1,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை டாடா பவர் நிறுவனம் அமைத்துள்ளது. பஸ் உள்பட அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் சார்ஜ் ஏற்றும் வசதிகளை டாடா பவர் நிறுவனம் வழங்குகிறது.

மேலும், மின்சார வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் டாடா பவர் நிறுவனம் கைகோர்த்து, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வசதியை செய்து தருவதற்கும் ஒப்பந்தங்களை செய்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் சார்ஜ் ஏற்றும் கவலையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

எம்ஜி மோட்டார், ஜாகுவார் லேண்ட்ரோவர், டிவிஎஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுடன் டாடா பவர் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், இந்த நிறுவனங்களின் மின்சார கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் டாடா பவர் நிறுவனத்தின் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை பயன்படுத்த முடியும்.

மேலும், டாடா பவர் நிறுவனத்தின் சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் எளிதான பணம் செலுத்தும் மற்றும் பதிவு நடைமுறைகளுக்காக Tata Power EZcharge என்ற மொபைல் அப்ளிகேஷனும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலமாக மிக எளிதாக சார்ஜ் செய்வதற்கான வாய்ப்பும், நேர விரயமும் தவிர்க்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 10,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அத்துடன், மேலும் பல மின்சார வாகன தயாரிப்பு நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








