பெஸ்ட் செல்லர் காராக மாறிய Tata Punch..! ஒன்னா... ரெண்டா... சிறப்பு வசதிகள் எக்கசக்கமா கொட்டி கிடக்குது!
டாடா பஞ்ச் (Tata Punch) காரின் கடந்த நவம்பர் மாத விற்பனை நிலவரம் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் விற்பனையில் மிகப் பெரிய சாதனையைப் படைத்திருப்பது இந்த தகவலின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பட்ஜெட் வாகன பிரியர்களைக் கவரும் நோக்கில் பஞ்ச் (Tata Punch) காரை மிக சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடலாகும். இந்த காரே கடந்த மாத விற்பனையில் சக்கைப்போடு போட்டிருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி 2021 நவம்பர் மாதம் 6,110 யூனிட்டுகள் விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இது மிக அமோகமான விற்பனை ஆகும். டாடா பஞ்ச் காருக்கு இந்தியர்கள் மத்தியில் சூப்பரமான டிமாண்ட் கிடைத்து வருவதை இந்த விற்பனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. மேலும், மைக்ரோ எஸ்யூவி கார் பிரிவில் வரலாற்று சாதனையைப் படைக்குமளவிலான விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.

இதனால் நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி மேல் இடத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது. புதிய அதிகபட்ச விற்பனையினால் கடந்த மாதம் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் 25வது இடத்தில் இருந்த பஞ்ச் தற்போது 14வது இடத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது.

இத்தகைய அமோக வளர்ச்சிக்கு பஞ்ச் காரை டாடா உருவாக்கியிருக்கும் விதமே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதிக ஸ்டைலான மற்றும் பாதுகாப்பு நிறைந்த காராக பஞ்ச் உருவாக்கப்பட்டுள்ளது. ஆம், டாடா பஞ்ச் மிகவும் பாதுகாப்பான காராகும். அண்மையில் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் இக்கார் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரே ரேட்டிங்கைப் பெற்றது.

பஞ்ச் காரில் பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமில்லைங்க அதிக தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அல்ட்ராஸ் கார்களில் வழங்கப்படுவதைப் போன்ற 90 டிகிரி திறக்கும் கதவுகள், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அதிக கரடு-முரடான பாதையைச் சமாளிக்கும் திறன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், புரஜெக்டர் ரக ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், 16 இன்ச் அளவுள்ள டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி வால் பகுதி மின் விளக்கு, ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் ஆகியவை வெளிப்புறத்தின் கவர்ச்சியான தோற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து, பஞ்ச் காரின் உட்பகுதியில் 7 இன்ச் தொடுதிரை (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டது), பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

டாடா பஞ்ச் ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ்ட் மற்றும் கிரியேட்டீவ் ஆகிய நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், இக்காரை கஷ்டமைஸ் செய்யும் வசதிகள் சிலவற்றையும் நிறுவனம் வழங்குகின்றது. ப்யூர் மற்றும் அட்வென்சர் வேரியண்டிற்கு ரிதம் கஷ்டமைசேஷன் வசதியையும், அக்காம்பளிஷ் வேரியண்டிற்கு டேஸிலையும், கிரேயேட்டீவ் வேரியண்டிற்கு ஐஆர்ஏ கஷ்டமைசேஷன்களையும் டாடா வழங்குகின்றது.

டாடா மோட்டார்ஸ் இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் 6,000 ஆர்பிஎம்மில் 84பிஎச்பி திறனையும், 3,300 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க்கையும், வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன், ஈகோ மற்றும் சிட்டி எனும் இரு விதமான ரைடிங் மோட்களும் இக்காரில் வழங்கப்படுகின்றன.

டாடா நிறுவனம் பஞ்ச் எஸ்யூவி காரை கடந்த அக்டோபர் மாதமே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு முன்னரில் இருந்தே இந்தியர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த ஆர்வம் தொடர்ச்சியாக இக்காரின் மீது நீடித்து வருவதை கடந்த மாத விற்பனை நிலவரம் உறுதிப்படுத்துகின்றது.


Click it and Unblock the Notifications








