உடனே வாங்க தூண்டும் குறைவான விலை... உச்சகட்ட பாதுகாப்பு... விற்பனையில் சாதனை படைக்கும் Tata Punch கார்!
முதல் மாதத்திலேயே டாடா பன்ச் கார் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). கடந்த அக்டோபர் 18ம் தேதி டாடா பன்ச் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு டாடா பன்ச் காரை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கின.

இது மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா (ALFA - Agile Light Flexible Advanced) பிளாட்பார்ம் முதன் முதலில் அல்ட்ராஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் டாடா பன்ச் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆல்ஃபா பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் எஸ்யூவி கார் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் பாதுகாப்பான கார்களை தயாரித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதால், அதன் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தின.

இந்த வரிசையில் டாடா பன்ச் காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் டாடா பன்ச் காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், 90 டிகிரி ஓபனிங் டோர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகியவை முக்கியமானவை.

அத்துடன் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகளும் டாடா பன்ச் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த டாடா பன்ச் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 5.49 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 9.09 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மிக குறைவான விலை, உச்சகட்ட பாதுகாப்பு, கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் அதிநவீன வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் டாடா பன்ச் காருக்கு இந்திய சந்தையில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. தனது முதல் மாதத்திலேயே 8,453 என்ற மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா பன்ச் பதிவு செய்துள்ளது.

இத்தனைக்கும் டாடா பன்ச் கார் கடந்த அக்டோபர் 18ம் தேதிதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர்தான் டெலிவரி பணிகள் தொடங்கின. இருப்பினும் மிக குறுகிய நாட்களிலேயே 8,453 பன்ச் கார்களை விற்பனை செய்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அசத்தியுள்ளது. இங்கே மற்றொரு விஷயத்தையும் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில், டாடா பன்ச் 10வது இடத்தை பிடித்துள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில் டாடா பன்ச் இடம்பிடித்திருப்பது உண்மையிலேயே மிக சிறப்பான விஷயம்தான்.

பன்ச் கார் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்பார்த்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், டாடா பன்ச் கார் மிக சிறப்பான தொடக்கத்தை கண்டுள்ளது. வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான கார்களில் ஒன்றாக பன்ச் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








