பாதுகாப்பான கார் வாங்கணுமா? அப்போ நம்ம டாடாதான் சரி... பேராதரவு அளிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் விற்பனையில் மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிகவும் பாதுகாப்பான கார்களை விற்பனை செய்து வருவதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் விரும்புகின்றனர். மேலும் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழி அடிப்படையில், கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் கவர்ச்சிகரமாகவும் டிசைன் செய்து வருகிறது. பாதுகாப்புடன் டாடா கார்களின் டிசைனும் அசத்துகிறது.

இதன் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீப காலமாக விற்பனையில் நல்ல வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த வரிசையில் கடந்த ஜூன் மாதமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் ஏறுமுகம்தான். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 24,111 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 11,419 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 113 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் 3வது இடத்தில் உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ, டிகோர், நெக்ஸான், அல்ட்ராஸ், ஹாரியர் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சஃபாரி ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய இரண்டு கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

இது இந்தியாவிற்கே பெருமை என்றால் மிகையல்ல. டாடா நெக்ஸான், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்ட கார்கள் உடன் டாடா நெக்ஸான் போட்டியிட்டு வருகிறது.

மறுபக்கம் டாடா அல்ட்ராஸ், பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது. நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய இரண்டு கார்களுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன.

இதில், நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் டாடா நெக்ஸான்தான். இதுதவிர அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் பல்வேறு அம்சங்களில் ஒத்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஐசி இன்ஜின் வெர்ஷனை போல், அல்ட்ராஸின் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications







