டாடா டியாகோ காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது... காரணம் தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...
இந்தியாவில் டாடா டியாகோ காரின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு வலுவான விற்பனை எண்ணிக்கையுடன் டாடா மோட்டார்ஸ் தொடங்கியிருப்பது இதன் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற கார்களை போல், டியாகோவும் (Tata Tiago) கடந்த ஜனவரி மாதம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜனவரி மாதம் 6,909 டியாகோ கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 4,313 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 60.19 சதவீத வளர்ச்சியை டாடா டியாகோ கார் பதிவு செய்துள்ளது.

இதேபோல் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டாலும், டாடா டியாகோ சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6,066 டியாகோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. எனவே அதற்கடுத்து வந்து ஜனவரியில் டாடா டியாகோ காரின் விற்பனை 13.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

டாடா டியாகோ காரின் பிரபலம் அதிகரித்து கொண்டே வருவதற்கு பாதுகாப்புதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும் டாடா டியாகோ பெற்றுள்ளது.

இதன் மூலம் தனது செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக டாடா டியாகோ திகழ்கிறது. டாடா டியாகோ காரின் விற்பனை உயர்ந்து வருவதற்கு, இந்த மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமே முக்கிய காரணமாக உள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் முன்பு போல் அல்லாமல், கார்களை வாங்கும்போது பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர்.

இந்த விஷயத்தில் டாடா டியாகோ வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து விடுகிறது. டாடா டியாகோ கார், சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை பலமுறை காப்பாற்றியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. டியாகோவை போல், டாடா நிறுவனத்தின் மற்ற கார்களான அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகியவையும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளன.

இந்த இரண்டு கார்களுமே, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டிலும், டாடா நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே டாடா டியாகோ காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்லைன்-3 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி என டாடா டியாகோ காரில் மொத்தம் 2 டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








