சிஎம் அந்த விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருக்காரு... கண்டிப்பா இதை செய்வோம்... அமைச்சர் அதிரடி தகவல்!
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தெலங்கானா மின்சார துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக ஏற்கனவே 138 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதே சமயம் வரும் காலத்தில் இன்னும் 600 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையை குறைக்க முடியும் எனவும் அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி கூறினார். அத்துடன் தெலங்கானா மாநில முதல் அமைச்சரான சந்திரசேகர ராவ் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விஷயத்தில் ஆர்வமாக இருப்பதாகவும் அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''தெலங்கானா மாநில அரசு எதிர்காலத்தில் நிச்சயமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும். ஏற்கனவே 138 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வெகு விரைவில் இன்னும் 600 சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.

தெலங்கானா மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில் ஆர்வமாக உள்ளன. ஆனால் போதிய அளவில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாத காரணத்தால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பொதுமக்கள் பலர் இன்னமும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஆனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகள் மூலமாக இந்த தயக்கம் கூடிய விரைவில் தகர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்து கொண்டே வருவதால், முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனையை விட எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகமாவதற்கு இன்னும் அதிக ஆண்டுகள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஒரு சில நாடுகளில் தற்போதே ஆச்சரியம் அளிக்கும் அளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

குறிப்பாக சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது சொகுசு கார் நிறுவனங்களும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கி விட்டன. உலகையே கலக்கும் டெஸ்லா நிறுவனமும் கூட வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனையை தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா, எம்ஜி, ஹூண்டாய் போன்ற நடுத்தர விலையில் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களை விற்பனையில் வைத்துள்ளன. அதே சமயம் மஹிந்திரா, மாருதி சுஸுகி, கியா மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்களிடம் இருந்தும் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை, டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஏத்தர் எனர்ஜி போன்ற முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த வரிசையில் மற்ற முன்னணி நிறுவனங்களும் கூடிய விரைவில் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே வரும் காலங்களில் இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை உயரவுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை அதிகரிப்பதன் மூலமாகவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. கச்சா எண்ணெய் இறக்குமதியை மட்டுமல்லாது, காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதும் இந்த திட்டங்களின் முக்கியமான நோக்கமாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








