பழைய வாகனங்கள் மீதான தடையை நீக்கி அதிரடி உத்தரவு... ஆனா ஒரே ஒரு கண்டிஷன்... என்னனு தெரியுமா?
பழைய டீசல் வாகனங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இந்த வாகனங்களை இயக்க கூடாது. மீறினால் வாகனம் பறிமுதல் உள்பட மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது பழைய வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த உத்தரவு காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் டெல்லி மாநில அரசு தற்போது புதிய விதிமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது பழைய வாகனங்களின் உரிமையாளர்களுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை தொடர்ந்து இயக்க முடியும்.

ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றம் செய்யப்பட்டால், தொடர்ந்து இயக்கலாம். டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். பழைய டீசல் வாகனங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்த இந்த முடிவு உதவி செய்யும்.

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆஃப்டர் மார்க்கெட் தொழில் வளர்ச்சியடைவதற்கு இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் இந்த உத்தரவு, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கும் பொருந்துமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த உத்தரவு தொடர்பாக தற்போதைய நிலையில் தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

டெல்லி அரசின் இந்த நடவடிக்கையை கிட்டத்தட்ட அனைவரும் வரவேற்றுள்ளனர். ஆனால் இந்த திட்டத்தில் உள்ள சந்தேகங்களை டெல்லி மாநில அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. டெல்லி மாநில அரசு தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதுதான் இதற்கான முக்கிய காரணம். டெல்லி மட்டுமல்லாது தற்போது அனைத்து மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

இந்தியாவில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகமாகி கொண்டே வருகின்றன. எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரையில், விற்பனை எண்ணிக்கையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாடா நிறுவனத்தின் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் 2021 டிகோர் எலெக்ட்ரிக் காரையும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. வரும் காலங்களில் அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதுதவிர டாடா சியாரா கார் கூட எலெக்ட்ரிக் அவதாரத்தில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் கார்களில்தான் எதிர்காலம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு, எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வேகமாக முன்னேறி கொண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் தவிர மற்ற நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் அடங்கும். மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் காராக வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








