அரசு அலுவலக வளாகத்திற்குள் இந்த நிறுவனத்தின் கார் மட்டும் நுழைய தடை! அதிரடியால் குறிப்பிட்ட கார் பயனர்கள் அவதி
அரசு அலுவலக வளாகத்திற்குள் குறிப்பிட்ட நிறுவனத்தின் கார் மட்டும் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. எங்கு இந்த விநோத தடை நிலவுகின்றது?, எந்த நிறுவனத்தின் தயாரிப்பு இதனால் பாதிப்பைச் சந்திதித்து வருகின்றது?, என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல மின்சார சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் தயாரிக்கும் கார்களையே அரசு அலுவலகங்களுக்குள் நுழைய தடை என்ற உத்தரவு வாய்மொழியாக கூறப்பட்டிருக்கின்றது. இந்த விநோத தடை நடவடிக்கை சீன நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

முன்னதாக மிலிட்டரி கேம்ப் பகுதிகளுக்குள் இக்கார் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அரசு அலுவலகங்கள் செயல்படும் வளாகங்களுக்கும் நுழையவும் டெஸ்லா மின்சார கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தானியங்கி மின்சார கார்களை பயன்படுத்தி வரும் சில சீன அரசு பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட தொடங்கியிருக்கின்றனர். அவர்களின் மேல் அதிகாரிகள், கார்களை அலுவலக வளாகத்திற்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு வரும்படி வாய்மொழியாக கூறியிருப்பதாக கூறப்படுகின்றது.

பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இரு மாகாணங்களில் பணியாற்றக் கூடிய அரசு அதிகாரிகள் இந்த வாய்மொழி உத்தரவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது பற்றிய துள்ளியமான புள்ளி விபரம் கிடைக்கவில்லை.

கடந்த சில மாதங்களாகவே இந்த மாதரியான சில விநோத நடவடிக்கைகளுக்கு டெஸ்லா கார்களைப் பயன்படுத்தும் அரசு பணியாளர்கள் ஆளாகி வருகின்றனர். ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சீன அரசு வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

இருப்பினும், நாட்டின் சில முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவம் செயல்படும் பகுதிகளில் டெஸ்லா மின்சார கார்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. இந்த விநோத தடைக்கு டெஸ்லா காரின் ஓர் தொழில்நுட்பம்தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?,.

ஆமாங்க, டெஸ்லா நிறுவனம் அதன் அனைத்து தயாரிப்புகளிலும் தானியங்கி வசதியை வழங்கி வருகின்றது. டிரைவர் இல்லாமல் ஓட்டும் வசதி, அவசர கால தானியங்கி பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் இதன் வாயிலாக வழங்கப்படுகின்றன. இந்த அம்சமே அரசு அலுவலகங்களுக்குள் டெஸ்லா மின்சார கார்கள் நுழைய தடையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு தங்கள் நாட்டின் செயல்பாடுகளை அமெரிக்ககா உளவு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. ஆகையால், இதுவே அறிவிக்கப்படா எதிர்ப்பை டெஸ்லா கார்கள் சந்திக்க காரணமாக அமைந்திருக்கின்றது. தானியங்கி அம்சத்திற்காக டெஸ்லா மின்சார கார்களில் பல செயற்கை நுண்ணறிவுக் கொண்ட கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதைக் கொண்டே அமெரிக்கா தங்களது ரகசியங்களை கண்கானிப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இந்த குற்றச்சாட்டிற்கு டெஸ்லா நிறுவனம் முழுக்க முழுக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது. தற்போது உலகளவில் அதிகம் மின்சார கார்கள் விற்பனையாகும் காராக சீனா இருக்கின்றது.

இங்கு டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் தனது உற்பத்தி ஆலையை நிறுவியுள்ள டெஸ்லா, அங்கு மாடல்3 மற்றும் மாடல் ஒய் ஆகிய பிரபலமான மின்சார கார்களை உற்பத்தி செய்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








