தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கி கொள்ளும் டெஸ்லா!! கார்களை திரும்ப அழைக்கவுள்ளதாம்...!!
டெஸ்லா நிறுவனம் உலகளவில் அதன் ஆயிரக்கணக்கான எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கிட்டத்தட்ட 5 ஆயிரம் யூனிட் மாடல் 3 மற்றும் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார்களை, அவற்றில் ஏற்படும் சீட்பெல்ட் பிரச்சனையின் காரணமாக பழுதுப்பார்க்க திரும்ப அழைக்கப்படுவதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 5 ஆயிரம் யூனிட்களில் 2018ல் இருந்து 2020 வரையில் தயாரிக்கப்பட்ட மாடல் 3 கார்களும், 2019ல் இருந்து 2021 வரையில் தயாரிக்கப்பட்ட மாடல் ஒய் கார்களும் அடங்குகின்றன. இவ்வாறான சீட்பெல்ட் பிரச்சனை டெஸ்லா கார்களில் ஏற்படுவதாக அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் சுட்டியுள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்தே தற்போது டெஸ்லா நிறுவனம் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையை அறிவித்துள்ளது. தோள்பட்டை பெல்ட், எளிமையான செயல்பாட்டிற்காக காரின் B-பில்லரில் நிலையாக பொருத்தப்பட வேண்டும்.

இவ்வாறான சீட்பெல்ட் பழுதிற்காக சீனாவில் சமீபத்தில் தான் தனது சில குறிப்பிட்ட கார்களை டெஸ்லா திரும்ப அழைத்து இருந்தது. ஆனால் அப்போது சில நூறு கார்கள் மட்டுமே அழைக்கப்பட்டன, இவ்வாறு ஆயிரக்கணக்கில் இல்லை.

இந்த சீட்பெல்ட் பிரச்சனையின் காரணமாக உலகில் எங்கும் டெஸ்லா கார் விபத்தில் சிக்கியதாக இதுவரையில் குறிப்பு இல்லை. ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளின் மீது சிறிய சந்தேகம் அமெரிக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளதால், இவ்வாறான திரும்ப அழைக்கும் நடவடிக்கையை இந்த நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

விற்கப்பட்ட கார்கள் சில பிரச்சனைகளின் காரணமாக திரும்ப அழைக்கப்படுவது ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில் இயல்பானதே. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் காரின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சற்று குறைக்கும்.

உலகளவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் கலிஃபோர்னியாவை சேர்ந்த டெஸ்லா மற்ற போட்டி நிறுவனங்களை தாண்டி பல படிகள் முன்னேறி சென்றுள்ளது. டெஸ்லாவை விரட்டி பிடிக்க ஃபோக்ஸ்வேகன், மெர்சிடிஸ், ரெனால்ட், ஹூண்டாய், கியா மற்றும் டொயோட்டா போன்ற உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பேட்டரி வாகனங்களை களமிறக்க தயாராகி வருகின்றன.

சீட் பெல்ட் பிரச்சனை ஒருபுறம் இருக்க, கடந்த சில மாதங்களாக ஆளில்லா இயங்கும் கார்களில் ஏற்படும் விபத்துகளையும் டெஸ்லா எதிர்கொண்டு வருகிறது. கடந்த மாதத்தில் அமெரிக்காவில் ஆளில்லா இயங்கும் காரின் செயல்பாட்டில் பயணி தலையிட்டதால் அந்த கார் சாலைக்கு அருகே இருந்த மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








