இந்தியாவின் 3 நகரங்களில் எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை திறக்க டெஸ்லா தீவிரம்... பிரம்மாண்டமாக அமைகிறது!
இந்தியாவின் 3 நகரங்களில் எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை திறக்க டெஸ்லா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெஸ்லா நிறுவனம் நடப்பாண்டு தொடக்கத்தில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தது. இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகத்திற்கு பெங்களூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் இன்னும் கார் விற்பனையை அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை. இதற்காக டெஸ்லா ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய 3 நகரங்களில், டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் பிரம்மாண்டமாக அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மூன்று நகரங்களிலும் டெஸ்லா நிறுவனம் இடத்தை கண்டறியும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடக்கத்தில் மாடல் 3 செடான் காரை இறக்குமதி செய்து, இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கு டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் டெஸ்லா மாடல் 3 காரின் விற்பனை அனேகமாக நடப்பாண்டு மத்தியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணக்கார வாடிக்கையாளர்களை குறிவைத்து, டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்குகிறது.

ஆனால் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் கார்கள் பெரிய அளவில் பிரபலமடையவில்லை என்பது முக்கிய குறைபாடாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னைகளுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு 2.4 மில்லியன் கார்கள் (20.40 லட்சம் கார்கள்) விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை வெறும் 5 ஆயிரம் மட்டும்தான்.

ஆனால் நமது அண்டை நாடான சீனாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சீனாவில் 1.25 மில்லியன் (10.25 லட்சம்) எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் தற்போது எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை வேகமாக ஊக்குவித்து வருகின்றன.

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற கட்டமைப்பு வசதிகளும் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. எனவே வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையும், வாடிக்கையாளர்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பி வருகிறது.

சலுகைகளை பொறுத்தவரை மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதுடன், சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் ஆன் ரோடு விலை ஓரளவிற்கு குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகரிக்கவும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு பற்றாக்குறை இருப்பதால்தான், இந்தியாவில் பெரும்பாலானோர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy: Tesla Cambodia Official


Click it and Unblock the Notifications








