'ரூ. 50000 அனுப்பினால் கார் இருக்கும் இடத்தை கூறுவேன்' -இணையத்தில் வைரலாகும் திருடன்-உரிமையாளர் உரையாடல்!
விநோத கார் திருட்டு சம்பவம்குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

வாகன திருடர்கள் வாகனங்களை திருடிய உடன் டூப்ளிகேட் ஆவணங்களை தயாரிப்பது, போலியான பதிவெண்ணைப் பொருத்துவது என அவ்வாகனத்தை செகண்ட் ஹேண்டில் விற்பதற்கான வேலையில் தீவிரம் காட்டுவர். ஆனால், இதுபோன்று எந்தவொரு அலட்டிக்கொள்ளுதலும் இல்லாமல் ஓர் திருடர் செயல்பட்டிருக்கின்றார்.

இவரின் செயல்பாடு வடிவேலு காமெடியை போல் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, காரை திருடி சென்ற பின்னர் உரிமையாளருடன் அவர் போட்ட டீலிங் இதுவரை எந்தவொரு திருடனும் மேற்கொள்ளாத ஒன்றாக அமைந்துள்ளது. எனவேதான், காரின் உரிமையாளர் மற்றும் திருடனின் உரையாடல்குறித்த (குறுஞ்செய்தி) புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இங்கிலாந்து நாட்டிலேயே இந்த விநோத திருட்டு சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மேற்கு மிட்லாண்ட் பகுதியில் வசித்து வருபவர் ஜேக் பேட்சன் (வயது 27). இவர் மிக சமீபத்தில் தனது கியா ரியோ காரை விற்பனைச் செய்ய இருப்பதாக சமூக வலை தளம் வாயிலாக விளம்பரப்படுத்தியிருக்கின்றார்.

இந்த நிலையில், ஏப்ரல் 12ம் தேதி அன்று காரை வாங்க இருப்பதாகக் கூறி ஓர் நபர் ஜேக் பேட்சனைத் தொடர்பு கொண்டிருக்கின்றார். அவர் விரும்பியதன் பேரில் காரை டெஸ்ட் டிரைவ் செய்ய ஜேக் அனுமதித்திருக்கின்றார். சாவியைப் பெற்றுக் கொண்டு காருடன் புறப்பட்ட அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவே இல்லை.

தன்னுடைய கார் திருடப்பட்டிருப்பதை ஜேக் உணர வெகு நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில், காரை திருடிச் சென்றவரே, உடனடியாக ஜேக்கை குறுஞ்செய்தி வாயிலாக தொடர்பு கொண்டிருக்கின்றார். "உன் கார் மீண்டும் வேண்டுமா?, அப்படி வேண்டும் என்றால் 500 பவுண்டுகளை வழங்க வேண்டும். ஒப்புக் கொண்டால் கார் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துவேன்" என குறுஞ்செய்தியின் வாயிலாக அவர் கூறியிருக்கின்றார்.

திருடனின் இந்த டீலிங்கிற்கு ஒப்பு கொள்ளாத ஜேக், மாறாக, காவல்துறையிடத்தில் புகார் கொடுக்க இருப்பதாக மறு பதிலை திருடனுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு 'லூல் எக்ஸ்' (Loooool x) என்ற மெசேஜை திருடன், ஜேக்கிற்கு அனுப்பி வைத்தார். செம்ம ஜோக் என்பதே இதற்கு அர்த்தம் ஆகும்.

இந்த விநோத உரையாடலே இத்திருட்டு சம்பவம் இணையத்தில் மிக வேகமாக வைரலாக காரணமாக அமைந்துள்ளது. இதுவரை எந்தவொரு திருடனும் கையாளாத ஓர் விநோத திருட்டு நிகழ்வாக இது இருப்பதாக நெட்டிசன்கள் பலர் இதனை குறிப்பிட்டுள்ளனர். மேலும், பலர் திருடனின் இச்செயலைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

திருடிய வாகனத்தை எப்படி அதிக பணத்திற்கு விற்று காசு பார்க்கலாம் என யோசிக்கின்ற திருடர்கள் இருக்கின்ற இந்த காலத்தில், இப்படியும் ஓர் திருடனா என்ற கேள்வி பலரின் மத்தியில் எழும்பியுள்ளது. அதேசமயம், இதுமாதிரியான திருடர்களை நம்பக் கூடாது என்பதே எங்களின் வேண்டுகோள் ஆகும்.

வாடிக்கையாளரைப் போல் தொடர்பு கொண்டு வாகனத்தைக் களவாடும் திருடர்கள் கூடுதல் பணத்திற்காக என்ன பொய் வேண்டுமானாலும் கூறலாம். அதாவது, இருப்பிடத்தைத் தெரிவிப்பதாகக் கூறி மேலும் சில ரொக்கங்களைப் பெற்றுக் கொண்டு காருடன் நழுவிச் செல்லலாம்.

ஆகையால், இதுமாதிரியான நிகழ்வின்போது ஜேக் பேட்சனைப் போன்று காவல்நிலையத்தின் உதவியை நாடுவதே மிக சிறந்தது. இது மேலும் ஏமாறுவதைத் தவிர்க்க உதவும். குறிப்பாக, இழந்த வாகனத்தை உடனடியாக மீட்டெடுக்க உதவும். கியா நிறுவனம், ரியோ மாடல் காரை இன்னும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவில்லை.

அதேசமயம், ஒரு சில உலக நாடுகளில் இக்காரை நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. ஹேட்ச்பேக் மற்ரும் செடான் என இரு ரகத்திலும் ரியோவை கியா விற்பனைச் செய்து வருகின்றது. கடந்த ஆண்டின் இறுதியில்தான் அமெரிக்காவில் இக்காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.


Click it and Unblock the Notifications








