காரை இப்போ வாங்கிக்கோங்க, காசை அப்புறமா கொடுங்க... மஹிந்திராவை தொடர்ந்து டொயோட்டா அதிரடி!!
காரை இப்போ வாங்குங்க, காசை பொறுமையா கட்டுங்க எனும் சிறப்பு திட்டத்தை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரசால் நிலவி வரும் ஊரடங்கைக் கருத்தில் கொண்டு அண்மையில் மஹிந்திரா நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. நிறுவனம், 'காரை இப்போது வாங்கவும், பணத்தை பின்னர் செலுத்தவும்' (Buy Now and Pay Later) என்ற திட்டத்தை அறிவித்திருந்தது.

இதே திட்டத்தையே தற்போது டொயோட்டா நிறுவனும் கையிலெடுத்திருக்கின்றது. நிறுவனம், பிரத்யேகமாக அர்பன் க்ரூஸர் காருக்கு மட்டுமே இத்திட்டத்தை அறிவித்திருக்கின்றது. டொயோட்டாவின் இந்த 'காரை இப்போது வாங்கவும், பணத்தை பின்னர் செலுத்தவும்' திட்டத்தின்கீழ் அர்பன் க்ரூஸர் காரை மட்டுமே வாங்க முடியும்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட விட்டாரா ப்ரெஸ்ஸா காரே, டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் ஆகும். பலினோவை அடுத்து நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனைச் செய்யும் காராக அர்பன் க்ரூஸர் கார் இருக்கின்றது. இதன் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையிலேயே சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பலினோ காரை க்ளான்ஸா எனும் பெயரில் விற்பனைச் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது. டொயோட்டாவின் புதிய திட்டத்தின்கீழ் அர்பன் க்ரூஸர் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் அக்டோபர் மாதத்தில் இருந்து காருக்கான மாதத் தவணையை செலுத்தினால் போதும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவே இத்திட்டத்தின் தனி சிறப்பாகும். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கால் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதனால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதமாக 'காரை இப்போது வாங்கவும், பணத்தை பின்னர் செலுத்தவும்' திட்டத்தை டொயோட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனைச் செய்து வரும் கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல மவுசு நிலவி வருகின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை பங்கை ரீபேட்ஜ் செய்யப்பட்ட வாகனங்கள் பெற்றிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சிறப்பு திட்டத்தை டொயோட்டா கையிலெடுத்துள்ளது. டொயோட்டா நிறுவனம் இன்னும் சில மாருதி கார்களையும் ரீபேட்ஜ் செய்து விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கின்றது. மிக விரைவில் அடுத்த ரீபேட்ஜ் செய்யப்பட்ட காராக சியாஸ் எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர்
டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில் ரீபேட்ஜ் வேலை மட்டுமின்றி சில மாற்றங்களையும் நிறுவனம் செய்திருக்கின்றது. அந்தவகையில், வெளிப்புற தோற்றம் மற்றும் உட்புறத்தில் இருக்கும் சில அம்சங்களிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகையால், இது பிரீமியம் தர காராக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








