கார் கைக்கு கிடைப்பது கஷ்டம்... டொயோட்டா எடுத்த முடிவால் ஆடிப்போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?
டொயோட்டா நிறுவனம் எடுத்துள்ள முடிவால், வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனம் வரும் நவம்பர் மாதம் உலகளவில் இவ்வளவு கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இலக்கில், 15 சதவீதத்தை குறைக்கவுள்ளது. உதிரி பாகங்களுக்கான பற்றாக்குறை தொடர்வதால் டொயோட்டா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. டொயோட்டா நிறுவனம் முன்னதாக வரும் நவம்பர் மாதம் 1 மில்லியன் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தது.

அதாவது 10 லட்சம் கார்கள். ஆனால் தற்போது இந்த இலக்கை 8.50 லட்சம் முதல் 9 லட்சம் கார்களாக குறைத்து கொள்வது என டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் இன்னமும் சில பாகங்களுக்கு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.

எனவே உற்பத்தியை குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜப்பானில் சுமார் 50 ஆயிரம் கார்களின் உற்பத்தி குறைக்கப்படும். அதே சமயம் வெளிநாடுகளில் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் கார்களின் உற்பத்தி குறைக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டொயோட்டா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதமும் உற்பத்தியை குறைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 3 சதவீதம் என்கிற அளவிற்கு டொயோட்டா நிறுவனம் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அதே நேரத்தில் டொயோட்டா நிறுவனம் மற்றொரு தகவலையும் தெரிவித்துள்ளது.

வரும் 2022ம் ஆண்டு மார்ச் 21ம் தேதியுடன் முடிவடையும் முழு ஆண்டுக்கான உற்பத்தி இலக்கு 9 மில்லியன் கார்கள் (90 லட்சம்) என்ற அளவில் இருந்து, மாற்றம் செய்யப்படவில்லை என டொயோட்டா கூறியுள்ளது. மேலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களின் சிறிய அளவிலான உற்பத்தி குறைப்பு நடவடிக்கை, ஸ்திரமாக நிற்க உதவியதாகவும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளால், கார்களுக்கான காத்திருப்பு காலம் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே பற்றாக்குறைக்கு மத்தியிலும் உதிரி பாகங்களை பெறுவதற்கு டொயோட்டா நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் உதிரி பாகங்கள் பற்றாக்குறை டொயோட்டா நிறுவனத்திற்கு மட்டுமானது கிடையாது.

உலக அளவில் முன்னணி நிறுவனங்கள் பலவும் உதிரி பாகங்கள் பற்றாக்குறை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கார்களின் முக்கிய பாகங்களில் ஒன்றான செமி கண்டக்டர்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகில் பெரும்பாலான நிறுவனங்களின் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கார் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் எஸ்யூவி காருக்கு மிக நீண்ட காத்திருப்பு காலம் நிலவி வருவதற்கு செமி கண்டக்டர் பற்றாக்குறை மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் அதிகப்படியான முன்பதிவுகள் குவிந்த காரணத்தால், மஹிந்திரா நிறுவனத்தால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனுடன் செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னையும் சேர்ந்து கொண்டதால், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கான காத்திருப்பு காலம் வெகுவாக உயர்ந்து கொண்டே சென்று விட்டது.

செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னை எப்போது முடிவுக்கு வரும்? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த பிரச்னை நீண்ட கால அடிப்படையில் நீடிக்கும் என்பது ஆட்டோமொபைல் நிறுவனங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே மாற்று வழிகள் குறித்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரமாக யோசிக்க தொடங்கியுள்ளன.

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வீட்டில் இருந்தே வேலை செய்தல் என புதிய ட்ரெண்ட் உருவானது. இதற்கு செல்போன் மற்றும் லேப்டாப்கள் அதிக அளவில் தேவைப்பட்டதும், செமி கண்டக்டர்களுக்கான பற்றாக்குறை பிரச்னைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னை விரைவில் முடிவடைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.


Click it and Unblock the Notifications








