காய்கறி கடையாக மாறிய அரசியல் வாதிகளின் பிரியமான எஸ்யூவி கார்... இந்த காரோட விலை எவ்ளோ தெரியுமா?..
இந்திய அரசியல்வாதிகளின் பிரியமான காரொன்று தற்காலிக காய்கறி கடையாக மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

டொயோட்டா நிறுவனத்தின் மிக பிரபலமான கார் மாடல்களில் ஃபார்ச்சூனரும் ஒன்று. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக விலைக் கொண்ட எஸ்யூவி கார்களில் இதுவும் ஒன்றாகும். இதுமட்டுமின்றி, நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராகவும் இது இருக்கின்றது.

இக்காரையே இந்திய இளைஞர் ஒருவர் தற்காலிக காய்கறி கடையாக மாற்றியிருக்கின்றார். மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. ஆனால், மஹாராஷ்டிராவின் எந்த பகுதியில் அரங்கேறியிருக்கின்றது என்பது பற்றிய துள்ளியமான தகவல் வெளியாகவில்லை.

காய்கறி கடையாக மாறியிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார்குறித்த வீடியோவை நிகில் ராணா எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இவ்வீடியோவின் மூலமாகவே பல லட்சங்கள் மதிப்புடைய ஃபார்ச்சூனர் தற்காலிக காய்கறி கடையாக மாறியிருக்கும் தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

வீடியோவில் இளைஞர் மராத்தி மொழியில் காய்-கறிகளை விற்பனைச் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பிட்ட காய்களை காரின் உட்பகுதியிலும், கூடைகள் மூலம் சில வகை காய்களை வெளியிலும் வைத்து அவர் விற்பனைச் செய்கின்றனர்.

காய்களை விற்பனைச் செய்வதற்காக காரின் பின்னிருக்கைகளை அவர் மடித்து வைத்திருக்கின்றனர். இதன்மூலம் கிடைத்த அதிக இட வசதியைக் கொண்டு ஓர் நபர் அமர்ந்தவாறு காய்கறிகளை விற்பனைச் செய்தார். இவர்களின் இச்செயலால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை காய்கறி கடையாகக் கூட பயன்படுத்தலாமா கேட்கத் தோன்றியுள்ளது.

காய்கறி கடையாக மாறியிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் புதிய தலைமுறை வெர்ஷன் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கார் இந்தியாவில் தற்போது ரூ. 30.34 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இது அரசியல்வாதிகளின் மிகவும் பிரியமான கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய விலையுயர்ந்த காரையே மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நபர் காய்கறி கடையாக மாற்றியிருக்கின்றார். இந்த மாற்றம் செய்யப்பட்ட காரின் உரிமையாளர் யார் என்பதுகுறித்த தகவல் தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும், காரின் ஒரு பகுதியில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தை வைத்து பார்க்கையில் காய்கறி கடையாக மாறியிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் உரிமையாளர் ஓர் டாக்டர் என்பது மட்டும் தெரிகின்றது. முன்னதாக இதேபோன்று கடந்த ஆண்டும், அதாவது, கொரோனாவின் முதல் அலையின் போது பலர் தங்களின் வாகனங்கங்களை இவ்வாறு காய்கறி மற்றும் பிற அத்தியாவசிய விற்பனையகங்களாக மாற்றினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
முழு ஊரடங்கின் காரணமாக எந்தவொரு வாகனமும் இயங்க முடியாத நிலை நாடு முழுவதும் உருவாகியது. ஆகையால், வாடகை வாகன ஓட்டிகள் பலர் இஎம்ஐ மற்றும் குடும்பத்திற்கான தேவையைக் கருத்தில் கொண்டு தங்களின் வாகனங்களை மாற்று சிந்தனையுடன் பயன்படுத்த தொடங்கினர். இந்த நிலையிலேயே இக்கலாச்சாரம் மீண்டும் இந்தியாவில் தென்பட தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








