மீண்டும் டாப் கியரில் டொயோட்டா கார்கள் விற்பனை!! தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டதன் பலன்!
டொயோட்டா நிறுவனம் கடந்த 2021 ஜூன் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா இரண்டாவது அலையால் கடந்த 2021 மே மாதத்தில் வாகன விற்பனை பெரிய அளவில் சரிந்ததை பார்த்திருந்தோம். ஆனால் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் ஆட்டோமொபைல் வாகன விற்பனை மீண்டும் சீராக ஆரம்பித்துள்ளது.

அதனை வெளிக்காட்டும் விதமாகவே தற்போது டொயோட்டாவின் கடந்த ஜூன் மாத விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 8,801 கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கை 2020 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 128 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் கொரோனா முதல் அலையின் தாக்கம் மெல்ல குறைந்துவந்த அந்த ஜூன் மாதத்தில் வெறும் 3,866 டொயோட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

2020 ஜூன் மாதமாவது பரவாயில்லை, டொயோட்டாவின் கார் விற்பனை 3 ஆயிரத்தையாவது கடந்திருந்தது. ஆனால் 2021 மே மாதத்தில் வெறும் 707 டொயோட்டா கார்களே விற்கப்பட்டன. தற்சமயம் சிறந்த விற்பனை டொயோட்டா கார்களாக க்ளான்ஸா, அர்பன் க்ரூஸர், ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா உள்ளன.

மொத்தமாக கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் வரையில், இந்த அரையாண்டில் 59,332 யூனிட் கார்களை இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2020ல் இதே ஆறு மாதங்களில் 28,686 கார்களையே டொயோட்டாவால் விற்க முடிந்திருந்தது.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த ஏப்ரல் இறுதியில் இருந்து மே இறுதி வரையில் என ஒரு மாத காலத்திற்கு மட்டுமே தீவிரமாக இருந்தது. 2021ஆம் ஆண்டின் துவக்க ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் கொரோனா வைரஸை அரசாங்கங்கள் கட்டுக்குள் வைத்திருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் 2020ஆம் ஆண்டில் மார்ச் மத்தியில் இருந்து இந்தியாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால், கிட்டத்தட்ட 2 மாத காலங்கள் ஊரடங்கில் மூழ்கின. குறிப்பாக 2021 ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனம் கூட இந்தியாவில் விற்கப்பட்டதாக பதிவு இல்லை.

ஏனெனில் நாடு தழுவிய முழு ஊரடங்கினால் தொழிற்சாலை பணிகள் முடங்கின. ஷோரூம்கள் மூடப்பட்டன. இதனாலேயே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு 2021ஆம் ஆண்டின் முதல் அரை பாதியில் டொயோட்டா கார்களின் விற்பனை இந்தியாவில் சுமார் 107 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கர்நாடகாவில் டொயோட்டா நிறுவனத்திற்கு தொழிற்சாலை உள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு இருந்த இந்த தொழிற்சாலை மீண்டும் கடந்த ஜூன் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் மேற்கூறப்பட்ட டொயோட்டா கார்களுடன், யாரிஸ், காம்ரி & வெல்ஃபையர் போன்ற டொயோட்டா கார்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








