டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
கொரோனா லாக்டவுன் விதிகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டதையடுத்து, பெங்களூர் அருகே உள்ள டொயோட்டா கார் ஆலையில் மீண்டும் கார் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலையும் ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய இன்னல்களை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பெரும்பான்மையான மாநிலங்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், வாகன ஆலைகளில் உற்பத்திப் பணிகள் தடைபட்டுள்ளன.

இந்த நிலையில், இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் மெல்ல குறைந்து வருகிறது. இதனால், லாக்டவுன் விதிகளிலும் மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளை கொடுத்து வருகின்றன. இதனால், வாகன நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியை துவங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனம் பிடதியில் உள்ள தனது கார் ஆலையில் இன்று முதல் உற்பத்திப் பணிகளை துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. அரசு கொடுத்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளுடன் உற்பத்திப் பணிகள் நடைபெறும் என்று கூறி இருக்கிறது.

மேலும் ஆலையில் 50 சதவீத பணியாளர்களுடன் இன்று உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாகவும், கார்களை புக்கிங் செய்து ஆவலோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முடிந்த அளவு விரைவாக கொடுப்பதற்கான வாய்ப்பாக இது அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

பல வாரங்களாக உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டதால், ஏராளமான ஆர்டர்கள் நிலுவையில் உள்ளது. எனவே, புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சீக்கிரமாக டெலிவிரி கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்று அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா பிரச்னை மட்டுமின்றி, அந்த ஆலை அமைந்துள்ள பகுதி சிவப்பு மண்டலத்தில் உள்ளதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தால் உற்பத்திப் பணிகளில் தடங்கல் ஏற்பட்டது.

இந்த சூழலில், தற்போது டொயோட்டா கார் ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டு இருப்பது புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமையும். பல மாதங்களாக காத்திருந்தாலும், விரைவில் புக்கிங் செய்த புதிய கார் கிடைத்துவிடும் நம்பிக்கை அவர்களுக்கு பிறந்துள்ளது.


Click it and Unblock the Notifications








