இந்த வங்கியில மின் வாகனங்களுக்கான வட்டி ரொம்ப கம்மி! எவ்ளோ தெரிஞ்சா இப்பவே கடனுக்கு அப்ளை பண்ணுவீங்க!
பிரபல வங்கி ஒன்று மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்திருக்கின்றது. அது எந்த வங்கி, எவ்வளவு வட்டி குறைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் பணிகள் மிக அமோகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உள் எரிப்பு எந்திரத்தால் (பெட்ரோல், டீசல்) இயங்கும் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை சற்றே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, மின் வாகன விற்பனைக்கு தடைக் கல்லாக இருக்கும் அதிக விலை, வரி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை ஆகியவற்றைக் களையெடுக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது. மின் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மானியம், வரி குறைப்பு மற்றும் முக்கிய பகுதிகளில் சார்ஜிங் மையங்களை உருவாக்கும் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. வங்கி நான்கு மற்றும் இரண்டு சக்கர மின்சார வாகனங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கின்றது. 6.95 சதவீதத்திற்கு குறைத்திருக்கின்றது.

'யூனியன் கிரீன் மைல்' (Union Green Mile) எனும் திட்டத்தின் கீழ் இந்த கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வட்டி விகிதம் மட்டும் குறைக்கப்படவில்லை, கடனுக்கான செயலாக்க (processing) கட்டணத்தையும் வங்கி நீக்கியுள்ளது. இந்த ஈர்ப்பு மின் வாகன பிரியர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் காருக்கான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. ஆகையால், எவ்வளவு விலை கொண்ட எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் வங்கி கடன் உதவியை வழங்கும் என தெரிகின்றது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கான கடன் அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ரூ. 10 லட்சம் வரையில் மட்டுமே மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டருக்கு கடன் வழங்கப்பட இருக்கின்றது.

இவற்றிற்கான வட்டி விகிதம் 6.95 சதவீதத்தில் இருந்து நிர்ணயிக்கப்படும். இது சிபிள் கிரெடிட் மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட இருக்கின்றது. மின் வாகனங்களுக்கான கடன் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கூரையில் சோலார் சிஸ்டம் அமைப்பதற்கான கடன் திட்டத்தையும் வங்கி அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த கடனுக்கும் சிறப்பு வட்டி தள்ளுபடி சலுகையை வங்கி அறிவித்திருக்கின்றது. அனைத்து வகையான குடியிருப்பாளர்களுக்கும் இதற்கான கடன் வழங்கப்படும் என வங்கி அறிவித்துள்ளது. இத்துடன், யூனியன் கிரீன் டெபாசிட் எனும் திட்டத்தையும் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது, டிஜிட்டல் வழியில் மட்டுமே திறக்கப்படக் கூடிய டெர்ம் டெபாசிட் திட்டம் ஆகும். இதன் வருமானம் முழுவதும் பசுமைக் கடன் திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. இந்த அனைத்து திட்டங்களும் வங்கியின் 103வது நிறுவன தினத்தை முன்னிட்டு வங்கி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 11ம் தேதி (வியாழக்கிழமை) அன்றே யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் 103 நிறுவன தினம் ஆகும். இந்த தினத்தில் பசுமை வாகனங்களுக்கான வட்டி குறைப்பு மட்டுமின்றி டிஜிட்டல் சுய சேவை கிளைகள் மற்றும் வாட்ஸ் ஆப் வங்கி சேவை ஆகியவற்றையும் வங்கி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் 13 மொழிகளில் இச்சிறப்பு சேவையை வழங்கும் வகையில் வங்கி நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

ஆனால், வங்கி நிர்வாகம் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கையே மக்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. 6.95 சதவீதம் ஆரம்ப வட்டி என்பது தற்போது வளர்ந்து வரும் இந்தியாவின் மின் வாகனத்துறையை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகின்றது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக மின் வாகனங்களின் விற்பனை அதிகரித்து காணப்படுகின்றது. இதற்கு தற்போது மிக அதிக வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆகையால், புதிய கடன் திட்டத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








