புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் அறிமுகத்தில் தொடரும் தாமதம்!! 2022ல் தான் விற்பனைக்குவரும் போலருக்கே...
புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்சமயம் இந்திய சந்தையில் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் அறிமுகங்களுள் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரின் அறிமுகமும் ஒன்று.

முன்னதாக இந்த மஹிந்திரா எஸ்யூவி காரின் அறிமுகம் கடந்த ஆண்டு இறுதியிலோ அல்லது இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்திலோ இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட வெவ்வேறான காரணங்களினால் இதன் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது டீம் பிஎச்பி செய்திதளம் மூலமாக இந்த கார் எப்போது விற்பனைக்கு வரலாம் என்பது குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்த அந்த செய்திதளத்தின் பதிவில், புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகலாம் என்றும், இந்த 2021 மாடலின் விற்பனையை மஹிந்திரா நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் பார்த்தோமேயானால், எப்படியிருந்தாலும் புதிய எக்ஸ்யூவி500 கார்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் துவங்க நவம்பர் மாதமாகி விடும். இதற்கிடையில் இந்த எஸ்யூவி காரின் சோதனை ஓட்டங்கள் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2021 எக்ஸ்யூவி500 காரின் சிறுத்தை வடிவிலான வெளிப்புற தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. முன்பக்க பொனெட் பகுதி சிறிது மாற்றியமைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதேபோல் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள் மற்றும் முன்பக்க க்ரில் டிசைன் திருத்தியமைக்கப்பட்டிருக்கலாம்.

காரின் நீளம் சற்று அதிகரிப்பட்டுள்ளதை இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் பார்த்திருந்தோம். இதன் காரணமாக உட்புற கேபின் கூடுதல் விசாலமாகி இருக்கும். மேலும் ஸ்பை படங்களின் மூலம் காரின் உட்புறத்திலும் சில புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதை அறிந்திருந்தோம்.

இதில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கான புதிய கிடைமட்ட திரைகள், கண்ட்ரோல்களுடன் புதிய பல-செயல்பாட்டு தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், ரீடிசைனில் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இவற்றுடன் அட்வான்ஸ்டு ஓட்டுனர் உதவி அமைப்புடன் நிலை 1 தானியங்கி தொழிற்நுட்பத்தையும் பெற்றுவரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய எக்ஸ்யூவி500 காரில் வழக்கமான 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் உடன் 2020 தாரில் அறிமுகப்படுத்தப்பட்ட 2.0 லிட்டர் டி-ஜிடிஐ எம்ஸ்டாலியோன் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வும் புதியதாக வழங்கப்படலாம்.

இந்த இரு என்ஜின் தேர்வுகளுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஓட்டு மொத்தமாக இத்தனை மாதங்களாக காத்திருப்பதற்கு ஏற்ற அம்சங்கள் அனைத்தையும் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








