ஓடோமீட்டரில் முறைகேடு! அமெரிக்க கார் விற்பனையாளருக்கு 5ஆண்டுகள் சிறை! இனி இந்த தப்ப செய்ய யோசிக்கணும்!
ஓடோமீட்டரில் முறைகேடு செய்த குற்றத்திற்காக பயன்படுத்திய கார் விற்பனையாளர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மிக அதிகபட்ச தண்டனையை விதித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் கார் விற்பனையாளருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதத்தை விதித்துள்ளது. இதற்கான காரணம்குறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அமெரிக்காவில் கார் விற்பனையாளர் ஒருவர் காரின் ஓடோமீட்டரில் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுகல் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதமானது இந்திய ரூபாய் மதிப்பில் 30 கோடிகள் ஆகும். இந்த உச்சபட்ச தண்டனையை அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி கியோ ஏ. மாட்சுமோடோ (Kiyo A. Matsumoto) வழங்கி உத்தரவிட்டுள்ளார். ஓடோமீட்டர் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ஷ்முவேல் மற்றும் அவரது சகோதரர் செயிம் என்பது தெரியவந்திருக்கின்றது.

இவர்கள் இருவரும் பயன்படுத்திய கார்களை விற்பனைச் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக லாபம் பெற வேண்டும் என்பதற்காக இவர்கள் கார்களின் ஓடோமீட்டரில் குறைந்த கிமீட்டர்கள் மட்டுமே பயணித்திருப்பது போன்று திருத்தி விற்றிருக்கின்றனர்.

இத்துடன், சில ஆவண முறைகேட்டில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த குற்றப் பின்னணிகளுக்காகவே செகண்ட்-ஹேண்ட் விற்பனையாளர்களுக்கு நீதிமன்றம் உச்சபட்ச தண்டனையை வழங்கியிருக்கின்றது. சகோதரர்கள் இருவரும் சேர்ந்து 690 வாகனங்களை மோசடி செய்து விற்பனைச் செய்திருக்கின்றனர்.

2006ம் ஆண்டு 2011ம் ஆண்டு வரை வாகனம் சார்ந்து பல்வேறு மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இதனடிப்படையில் தொடரப்பட்ட வழக்கிலேயே இருவரும் தற்போது தண்டனைப் பெற்றிருக்கின்றனர்.

இந்தியாவில் இந்த செயலுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
அமெரிக்காவில் மட்டுமில்லைங்க உலக நாடுகள் பலவற்றில் இந்த முறைகேடுகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவிலும் இதுமாதிரியான முறைகேடுகள் தற்போது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பெரியளவில் கடுமையான சட்டங்கள் இல்லை என வாகன வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகையால், ஓடோமீட்டர் சார்ந்து முறைகேடுகள் செகண்ட்ஹேண்ட் சந்தையில் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதுமட்டுமின்றி, விபத்துகளை மறைத்தல், பழுதுகள் குறித்த தரவுகளை அழித்தல் போன்ற பல்வேறு முறைகேடுகள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது.

அதேசமயம், இந்தியாவில் பயன்படுத்திய கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருவதும் குறிப்பிடத்தகுந்தது. ஆம், இந்தியாவில் புதிய கார்களுக்கு இணையாக பயன்படுத்திய வாகனங்களும் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இந்தியாவிலும் பயன்படுத்திய வாகனங்கள் சார்ந்து நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் பலரின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.


Click it and Unblock the Notifications