முதல்வரின் தரமான சம்பவம்... எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியத்தை அள்ளி கொடுக்க முடிவு... எவ்ளோனு தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல் அமைச்சர் புஷ்கர் சிங் தாமி (Pushkar Singh Dhami) அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இனி வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னை குறைவதற்கும் இந்த நடவடிக்கை உதவி செய்யும். உத்தரகாண்ட் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலில் வாங்கப்படும் 5,000 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கும், 1,000 எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.

எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை அதன் விலையில் 10 சதவீதம் அல்லது 7,500 ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதில் எது குறைவோ, அந்த தொகையை அரசு மானியமாக வழங்கவுள்ளது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை பொறுத்தவரையில், அதன் விலையில் 5 சதவீதம் அல்லது 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும்.

இதிலும் எந்த தொகை குறைவோ, அதுதான் மானியமாக கிடைக்கும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாநில அரசு மானியம் வழங்குவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே டெல்லி, குஜராத் போன்ற பல்வேறு மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருகின்றன. இதுதவிர ஒன்றிய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குகிறது.

ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு மானிய தொகையை வழங்கி கொண்டுள்ளது. இந்த வரிசையில் அஸ்ஸாம் மாநில அரசும் சமீபத்தில் இணைந்தது. அஸ்ஸாம் மாநில அரசு தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை சாலைக்கு கொண்டு வர அஸ்ஸாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும் எனவும் அஸ்ஸாம் மாநில அரசு வாக்குறுதி அளித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலை மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வரும் ஆதரவு காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தற்போது படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. மக்கள் ஆர்வம் காட்டுவதால், முன்னணி நிறுவனங்கள் பலவும் தற்போது தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

சமீப கால அளவில் பார்த்தால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டதற்கான அறிகுறியாகவே இது கருதப்படுகிறது. வரும் நாட்களில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் போன்ற எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. எம்ஜி மோட்டார் நிறுவனமும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ஏற்கனவே விற்பனையில் உள்ள இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரில், சிறிய பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மற்ற முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

ராயல் என்பீல்டு நிறுவனமும் கூட எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வது குறித்து யோசிக்க தொடங்கியுள்ளது. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனைக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பார்த்தால் இந்தியாவில் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








